மகளிர் ஆணையத் தலைவிக்கே டெல்லியில் பாதுகாப்பில்லை.. காருடன் இழுத்துச் சென்ற டிரைவர்!

Su.tha Arivalagan
Jan 20, 2023,01:12 PM IST
டெல்லி: டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவாலிடம், டாக்சி டிரைவர் தவறாக நடக்க முயன்றதோடு அவரை காருடன் சேர்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



டெல்லி மகளிர் ஆணையத் தலைவியாக இருப்பவர் ஸ்வாதி மாலிவால்.  இவர் டெல்லி நகர  சாலைகளில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிவதற்காக நேற்று முன்தினம் இரவு தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே அதிகாலை 3 மணியளவில் தனது அணியுடன் அவர் சென்று கொண்டிருந்தார். அவர் தனியாக நடக்க சற்று இடைவெளிவிட்டு பின்னால் அவரது அணியினர் வந்துள்ளனர். தனியாக ஸ்வாதி நடந்து வருவதைப் பார்த்து ஒரு டாக்சி டிரைவர் ஸ்வாதி மாலிவாலிடம்  தவறாகப் பேசியுள்ளார். இதற்கு ஸ்வாதி ஆட்சேபிக்கவே அந்த டிரைவர் கோபத்துடன், காருக்கு வெளியே கையை நீட்டி ஸ்வாதியை பிடித்து இழுத்தபடி காரை ஓட்டத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட 15 மீட்டர் தொலைவுக்கு கார் போய் விட்டது. இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ந்த ஸ்வாதியின் டீம், உடனடியாக விரைந்து ஓடி வரவே டிரைவர், ஸ்வாதியை விட்டு விட்டு காருடன் பறந்து விட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து ஸ்வாதி மாலிவால் தனது முகநூலில் போட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,எனது டீம் மட்டும் மீட்காவிட்டால், சமீபத்தில் கார் ஒன்றில் சிக்கி பல கிலோமீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட அஞ்சலியின் கதிதான் எனக்கும் நேர்ந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடவடிக்கையில் இறங்கி 47 வயதான ஹரீஷ் சந்திரா என்ற டாக்சி டிரைவரைக் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று அந்த டிரைவர் நல்ல குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. 

ஹரீஷ் சந்திரா குறித்து ஸ்வாதி கூறுகையில் அந்த நபர் மிக மிக மோசமாக நடந்து கொண்டார். இரைக்காக காத்திருக்கும் விலங்கு போல அவரது செயல்கள் இருந்தன. மிகவும் கொடூரமான புத்தி கொண்டவராக இருந்தார். இரக்கம் சற்றும் இல்லை. நான் ஆடிப் போய் விட்டேன். ஆனால் பயப்படவில்லை. பெண்கள் எந்த அளவுக்கு இப்படிப்பட்ட ஆண்களின் கொடூரங்களை சந்திக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதிர்ந்து போய் விட்டேன். 

இன்று எனக்கு நடந்தது நாளை எந்த டெல்லி பெண்ணுக்கும் நடக்கலாம்.  குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் டெல்லி சாலையில்  நடமாடுவது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவியான எனக்கே டெல்லியில் பாதுகாப்பில்லை.. மற்றவர்களை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஸ்வாதி.