7 மாநில முதல்வர்களை டின்னருக்கு அழைத்த கெஜ்ரிவால் .. யாரும் வராததால் ஏமாற்றம்!

Su.tha Arivalagan
Mar 21, 2023,02:25 PM IST

டெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட 7 மாநில முதல்வர்களை சந்திக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டிருந்தார். ஆனால் யாரும் வராததால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார். இது 3வது அணி அமைக்கும் முயற்சியா என்று சந்தேகிக்கப்படுகிறது.


2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்போதே அரசியல் கட்சிகள் தயாராக  ஆரம்பித்து விட்டன. பாஜக தனது உத்திகளை களம் இறக்க ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், பிராந்தியத்திற்கும் என திட்டங்கள் வகுத்து செயல்பாடுகளைத் தொடங்கி விட்டது.


மறுபக்கம் காங்கிரஸ் இன்னும் தனது கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதேசமயம், சில முக்கிய கட்சிகள் காங்கிரஸுடன் தொடர்ந்து பயணிப்பதை உறுதி செய்துள்ளன. காங்கிரஸ் தலைமையில் பிரமாண்ட கூட்டணியை அமைக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. 


இந்த நிலையில் மமதா பானர்ஜி, சந்திரசேகர ராவ் உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்கள் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை. அவர்கள் தனிக் கூட்டணி அமைக்க முயன்று வருகின்றனர். ஆனால் இப்படி ஆளுக்கு ஒரு பக்கமாக போனால் நிச்சயம் அது பாஜகவுக்கே லாபமாக முடியும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான  மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.


இருப்பினும் சமீபத்தில் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜியும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் சந்தித்துப் பேசினர். ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் இணைத்து தனி அணியாக செயல்படப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பின்னணியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னொரு புதிய கூட்டணிக்கு பிள்ளையார் சுழி முயன்றதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.


காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத முதல்வர்கள் கூட்டணியை உருவாக்க அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  இதுதொடர்பாக அவர் 7 மாநில முதல்வர்களுக்கு  கடந்த மாதம் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதில் மார்ச் 18ம் தேதி டெல்லியில் தன்னுடன் இரவு விருந்து அருந்த வருமாறு அழைத்திருந்தார். 


பிரச்சினைகளின் அடிப்படையில் மத்திய அரசை எதிர்த்துப் போராட இந்த கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். இக்கடிதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பீகார் முதல்வர் நிதீஷ் யாதவ் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.


ஆனால் யாரும் அதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லையாம். இதனால் கெஜ்ரிவால் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் அது தவறான சிக்னலை தேசிய அளவில் கொண்டு போய் விடும் என்ற அச்சத்திலேயே பிற முதல்வர்கள் கெஜ்ரிவால் அழைப்பை ஏற்க தயங்கியதாக கூறப்படுகிறது. 


பாஜகவுக்கு எதிராக அத்தனை எதிர்க்கட்சிகளும் சேர்ந்தால் மட்டுமே அக்கட்சிக்கு நெருக்கடியைத் தர முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். ஆனால் அப்படி ஒரு பிரமாண்ட கூட்டணி தேசிய அளவில் உருவாகுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.