நடிகைகள் பற்றி அவதூறு பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு..!

Manjula Devi
Sep 16, 2024,10:19 AM IST

சென்னை:   தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேசியதாக நடிகையும்,நடிகர் சங்க விசாக கமிட்டி தலைவருமான ரோகினி கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் காந்தராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கடந்த மாதம் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி கேரள மாநிலத்தையே புரட்டி போட்டது. இதில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்ததாக நடிகர் நிவின் பாலி உட்பட பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழ் நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை நடந்திருப்பதாக நடிகை ராதிகா கூறியிருந்தார். இதற்கிடையே தமிழ் சினிமாவில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பலரும் சோசியல் மீடியாவில்  தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 




அந்த வரிசையில் பாலியல் அத்துமீறல்கள் குறித்து மருத்துவர் காந்தராஜ் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது படத்தில் நடிக்கும் நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் குறித்தும், நடிகைகள் இது பற்றி தெரிந்தும் ஓகே சொல்லிவிட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு புகார்  அளிப்பதாகவும் அவர் வெளிப்படையாக விமர்சித்து இருந்தார். முன்னதாக கேரளாவில் ஹேமா கமிட்டி குழு போன்று, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க விசாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நடிகை ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.


 இந்த நிலையில் டாக்டர் காந்தராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகைகள் குறித்து அவதூறு பேசியதாக விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி புகார் கொடுத்துள்ளார். இதில் நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாக பேசியது கண்டிக்கத்தக்கது. ஆதாரங்கள் இன்றி நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து நடித்து வருவதாக குற்றம் சாட்டி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் ஒரு சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.இதனால்  டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ரோகினி அந்த  புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில், டாக்டர் காந்தராஜ் மீது பெண்களை ஆபாசமாக பேசுதல், பெண்களை அவமதித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்