நெருங்கும் தீபாவளி.. உச்சகட்ட பர்ச்சேஸில் மக்கள்.. அதிகரிக்கும் போலீஸ் பாதுகாப்பு

Su.tha Arivalagan
Nov 07, 2023,02:46 PM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பர்ச்சேஸில் மும்முரமாகியுள்ளனர். அனைத்து நகரங்களிலும் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக கூடங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.

தீபாவளிப் பண்டிகை வருகிற 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி புதி ஆடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவற்றை பர்ச்சேஸ் செய்யும் வேலையில் மக்கள் மும்முரமாக உள்ளனர்.

இதனால் ஜவுளிக் கடைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நகை கடைகளிலும் கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. அனைத்துக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் கடை வீதிகளும் மக்கள் கூட்டம் கடல் போலக் காணப்படுகிறது.



சென்னையில் தி.நகர் மக்கள் கடலாக மாறிக் காட்சி தருகிறது. ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, ஜிஎன் செட்டி தெரு உள்ளிட்ட அனைத்து வர்த்தகப் பகுதிகளிலும் மக்கள் நெரிசலாக உள்ளது. அதேபோல புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகளில் கூட்டம் கட்டி ஏறுகிறது.

மதுரையிலும் விளக்குத்தூண், நேதாஜி சாலை உள்ளிட்ட ஜவுளிக் கடைகள், பிற கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. கோவை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கடைசி நேர பர்ச்சேஸ் களை கட்டியுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகம் வருவதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த எச்சரிக்கை அறிவிப்பும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் தீபாவளி கூட்ட நெரிசலைக் கண்காணிக்கவும், பாதுகாப்பு கொடுப்பதற்கும் கிட்டத்தட்ட 18,000க்கும் மேற்பட்ட போலீஸார் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் கூடும் இடங்களில் மக்களுக்கு உதவும் வகையில் போலீஸார் பணியாற்றி வருகின்றனர். முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கூடுதல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கூட்டத்தினர் கண்காணிப்படுகின்றனர்.