பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம்.. இதுவே இறுதி.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Oct 03, 2023,08:47 AM IST

சேலம்: பாஜக கூட்டணிக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம். 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு இது. இனி அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


சேலத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது பாஜக கூட்டணி விலகல் குறித்தும் விளக்கினார். அப்போது அவர் பேசியதிலிருந்து:


அதிமுக தலைமையில் பிரமாண்டமான கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்து விட்டோம். அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளும், தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் எடுத்து வைத்தார்கள். 2 கோடி தொண்டர்களின் உணர்வை ஆலோசனைக் கூட்டம் கருத்தில் கொண்டது. அதன் அடிப்படையில்தான் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாஜகவிடமிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அத்தோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும்  விலகிக் கொள்வது என்ற முடிவும் எடுக்கப்பட்டது.


பொதுச் செயலாளர் என்ற முறையில் இது நான் எடுத்த முடிவு அல்ல. இது ஒட்டு மொத்த கட்சி எடுத்த முடிவு. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடுத்த முடிவு. எனவே விவாத மேடைகளில் பங்கு பெறுவோர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து சொல்லவில்லை என்று பேசத் தேவையில்லை. ஒரு கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, முடிவு எடுக்கப்பட்டது என்று சொன்னால்,  அது அனைவரின் சம்மதத்தோடுதான் நிறைவேற்றப்பட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் இறுதி முடிவு. 


அதிமுக 2 கோடி தொண்டர்கள் உள்ளகட்சி. அதிமுகவைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்யும் இயக்கம். இங்கே யார் பிரதமர் வேட்பாளர் என்று கேட்கிறார்கள். ஒடிசாவில் யார் பிரதமர் என்று சொல்லியா தேர்தலைச் சந்திக்கிறார்கள். மேற்கு வங்காளத்தில், தேர்தலை அப்படியா சந்திக்கிறார் மமதாம்மா. ஆகவே, அதிமுக தலைமையில் வருகிற தேர்தலில் பிரம்மாண்டமான   கூட்டணியை அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடுவோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.