"கூட்டணி குறித்த முடிவா.. பொறுமையா இருங்க..  ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்"..  பிரேமலதா விஜயகாந்த்

Meenakshi
Mar 19, 2024,05:31 PM IST

சென்னை: கூட்டணி குறித்த நல்ல முடிவை இரண்டு நாட்களில் அறிவிக்கிறேன். எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தலுக்கு தேதி சொல்லி விட்டார்கள். திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து விட்டது. பாஜக கூட்டணியும் முடிவாகி அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள். அதிமுக கூட்டணியின் இறுதி வடிவம்தான் இன்னும் தெரியாமல் உள்ளது. 




தேமுதிக கேட்கும் தொகுதிகளை கொடுப்பதில் சிக்கல் நிலவி வந்ததால்தான் இன்னும் கூட்டணியை அறிவிக்காமல் உள்ளதாக சொல்கிறார்கள். தற்போது பாமக வராது என்பது உறுதியாகி விட்டதால் தேமுதிகவுக்கு  கூடுதல் தொகுதிகளே கிடைக்க வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாம். 


இந்நிலையில், கூட்டணி குறித்த நல்ல முடிவை இரண்டு நாட்களில் அறிவிக்கிறேன். எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம்,  சாமி கும்பிடுவது என்று பிசியாக இருந்து வருகிறார்.


விருப்ப மனு விநியோகம் தொடங்கியது




40 தொகுதிகளுக்கும் தற்போது தேமுதிக விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது.  தேமுதிக  சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் நாளை மாலை வரை விருப்ப மனு அளிக்கலாம் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை நாளை ளாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.


சிதம்பரத்தில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன்.. விழுப்புரத்தில் ரவிக்குமார் .. திருமாவளவன் 


நாடாளுமன்ற பொது தொகுதிக்கான விருப்பமான கட்டணமாக ரூபாய் 15,000, தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10,000, செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.


அதன்படி இன்று விருப்ப மனு தாக்கல் தொடங்கியது. பலரும் விருப்ப மனுக்களை வாங்கி பிரேமலதா விஜயகாந்த்திடம் வழங்கினர்.