முப்பெரும் ஆளுமைகளை விழுங்கி.. சுனாமி, வெள்ளம்.. டிசம்பருக்கு ஏன் இந்த வெறுப்பு தமிழ்நாட்டின் மீது?

Su.tha Arivalagan
Dec 29, 2023,10:45 AM IST

சென்னை:  முப்பெரும் ஆளுமைகளை இந்த டிசம்பர் விழுங்கியுள்ளது. சுனாமியைக் கொடுத்து  சேதப்படுத்தியுள்ளது, காயப்படுத்தியுள்ளது.. வரலாறு காணாத வெள்ளங்களைக் கொண்டு வந்து நம்மை அலைக்கழித்துள்ளது. தமிழ்நாட்டு வரலாற்றின் சோகப் பக்கங்களில் டிசம்பர் தனி இடம் பிடித்து விட்டது.


டிசம்பர் வந்தாலே அந்த மாதத்தில் வரும் மார்கழி மாதமும், அதன் குளிரும், இசை விழாக்களும் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். ஆனால் இந்த மாதத்தைப் பார்த்து எல்லோரும் நடுங்கும் அளவுக்கு திகில் மாதமாக மாறி நிற்கிறது டிசம்பர்.


இந்த டிசம்பரில்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்தார். டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு அவரது மறைவுச் செய்தி வந்தபோது தமிழ்நாடே துடித்துப் போனது. கதறி அழுதனர் மக்கள்.. சென்னையில் மொத்தமாக திரண்டது தமிழ்நாடு. மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்று மெரீனாவில் அடக்கமானார் எம்ஜிஆர்.




அதற்கு அடுத்து தமிழ்நாடு இதே டிசமம்பர் 26ம் தேதி சுனாமி பேரலையைச் சந்தித்தது. பல ஆயிரம் உயிர்கள் பறி போயின. பல்லாயிரம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். தமிழ்நாடு சந்தித்திராத மிகப் பெரிய பேரழிவு அது.


இதே டிசம்பர் 5ம் தேதிதான் முன்னாள் முதல்வரும், இந்திய அரசியலின் மிகப் பெரிய பேராளுமையாக திகழ்ந்தவருமான ஜெயலலிதா மறைந்தார். தமிழ்நாட்டின் மிகப் பெரிய சோகம் அது.


ஜெயலலிதா மறைவுக்கு முன்பாக 2015ம் ஆண்டு இதே டிசம்பரில்தான் சென்னை வரலாறு காணாத வெள்ளத்தில்   மூழ்கித் தத்தளித்தது. பலர் உயிரிழந்தனர். சென்னையை ஸ்தம்பிக்க வைத்த சம்பவம் அது.


இந்த ஆண்டு டிசம்பர் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய, சோகமான, மறக்க முடியாத மாதமாகி விட்டது. மாதத்தின் ஆரம்பத்தில் சென்னை பெரு வெள்ளத்தை சந்தித்து ஸ்தம்பித்தது. மாதத்தின் நடுவில் தென் கோடி மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி சீரழிந்தன. இதோ இப்போது கேப்டன் விஜயகாந்த் உயிரைப் பறித்து விட்டது இந்த டிசம்பர் மாதம்.


டிசம்பர் மாதம் வந்தாலே குளிரில் நடுங்குவோம்.. ஆனால் இன்று எல்லோரையும் அச்சத்தில் நடுங்க வைத்து விட்டது இந்த மாதம்.. தமிழ்நாட்டின் மீது ஏன் டிசம்பருக்கு இவ்வளவு கோபம்?