அழகிற்கு மொழி எதற்கு?... மிஸ் செளத் ஆப்ரிக்கா பட்டத்தை தட்டிச் சென்ற மாற்றுத்திறனாளி பெண்!

Aadmika
Aug 13, 2024,06:30 PM IST

பிரிட்டோரியா :   தென்னாப்பிரிக்கா நாட்டில் நடந்த மிஸ் செளத் ஆப்ரிக்கா அழகிப் போட்டியில் 28 வயதாகும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அழகி பட்டத்தை தட்டிச் சென்று உள்ளார். அழகிப்பட்டத்தை வென்ற உலகின் முதலாவது மாற்றுதிறனாளி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.


தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் தென்னாப்பிரிக்க அழகிப் போட்டி 2024 சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் பங்கேற்ற 30 பேரில் 9 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்கள் 9 பேருக்கும் ஆகஸ்ட் 10 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 28 வயதாகும் மாற்றுத் திறனாளி பெண் ஆன மியா லி ரூக்ஸ் (Mia le Roux) அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.




சசோல்பர்க் நகரில் பிறந்த மியா, தனக்கு ஒரு வயதாக இருக்கும் போது கேட்கும் திறனை இழந்தார். அதற்கு பிறகு செயற்கை கேட்கும் கருவிகளை வைத்தே அவர் அனைத்தையும் கேட்க துவங்கினார். தென்னாப்பிரிக்கா இன்ஸ்டியூட் ஆஃப் ஸ்போர்ட் சயின்சில் நியூட்ரிசன் சான்றிதழ் கோர்ஸ் படித்தார். பிறகு டிப்ளமோ, பி.காம்., மார்கெட்டிங் பகுதி நேரமாக படித்து, தற்போது மார்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வருகிறார். பகுதி நேரமாக மாடலிங்கும் செய்து வருகிறார். இவர் தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகத்தில் மார்கெட்டிங்கும் படித்து வருகிறார்.


தனக்கு கிடைத்துள்ள அழகிப் பட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மியா, நான் காது கேளாத பெண் என்பதில் பெருமை கொள்கிறேன். எல்லைகளை தகர்த்து எறிவதற்காக நான் பூமிக்கு வந்துள்ளேன் என நம்புகிறேன். அது இன்று நிஜமாகி விட்டது என தெரிவித்துள்ளார்.


மிஸ் செளத் ஆப்ரிக்கா பட்டத்தைப் பெற்றுள்ள மியா லி ரூக்ஸுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்