தி கேரளா ஸ்டோரி படத்தை ஒளிபரப்பும் தூர்தர்ஷன்.. முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு

Su.tha Arivalagan
Apr 05, 2024,10:49 AM IST

திருவனந்தபுரம்: தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதற்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தல் வரும் நேரத்தில் இது மாதிரியான சர்ச்சைக்கிடமான படங்களை திரையிடுவதன் மூலம் மத ரீதியான பதட்டங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தூர்தர்ஷன் நிறுவனமானது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் ஊதுகுழலாக மாறக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தூர்தர்ஷன் தொலைக்காட்சி சானலில், ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 8 மணிக்கு கேரளா ஸ்டோரி படம் திரையிடப்பட திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒன்றாகும். கேரளாவில் கடும் எதிர்ப்பை இந்த படம் சந்தித்தது. இந்த படத்தை அங்கு திரையிட கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் இப்படத்தை தூர்தர்ஷன் திரையிடுவதாக அறிவித்துள்ளதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கேரளா ஸ்டோரியை தூர்தர்ஷன் ஒளிபரப்புவது கடும் கண்டனத்துக்குரியது. இது பாரபட்சமான ஒரு முடிவாகும். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் ஊது குழலாக தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் மாறக்கூடாது. இந்த படத்தை லோக்சபா தேர்தலுக்கு முன்பு வெளியிடுவதன் மூலம் மதரீதியிலான பதட்டத்தை தூண்டுவதாக அமையும். மத துவேஷத்தை வளர்க்கவே இது உதவும். கேரளா எப்போது  மத துவேஷத்துக்கு எதிரானது, மத பாரபட்சத்திற்கு எதிரானது என்பதை நிரூபிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்களை மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்து முஸ்லீமாக மாற்றி, அவர்களை பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாக கூறி ஒரு கதையைப் புணைந்து அதைப்படமாக்கியிருந்தனர். இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.  2023ம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வந்தபோது சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டன என்பது நினைவிருக்கலாம்.