அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துக்கணுமா?.. இதோ வழி இருக்கு

Aadmika
Jan 21, 2024,02:28 PM IST

அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படுவதை பலரும் எதிர்பார்த்துக்  கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் அயோத்தி சென்று இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என ஏக்கமும் பலருக்கு உள்ளது. ஆனால் இந்த புனிதமான விழாவில் கலந்து கொண்டு, அந்த தெய்வீக அனுபவத்தை பெற வழி செய்யப்பட்டுள்ளது.


ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட அயோத்தி ராமர் கோவில் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட 7000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 4000 புரோகிதர்கள், 2500 குடிமக்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாரணாசியை சேர்ந்த லக்ஷ்மி காந்த் தீட்ஷித் என்ற புரோகிதர் தான் இந்த ஒட்டுமொத்த கும்பாபிஷேக சடங்குகளையும் நடத்தி வைக்க போகிறார்.




இந்த விழாவில் கலந்து கொள்ள அனைவரும் விரும்புவார்கள் என்பதால், கிராமம் முதல் நகரம் வரையிலான அனைவரும் இவ்விழாவை நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


டிடி நியூஸ் மற்றும் டிடி நேஷனல் சேனல்களுக்கு ஜனவரி 22ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஒளிபரப்பாளர்களுக்கு தூர்தர்ஷன் யூட்யூப் லிங்குகளையும் வழங்க உள்ளது.  


இந்தியன் ரயில்வே சார்பில் ரயில் நிலையங்களில் 9000 திரைகளில் இந்த விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 70 நகரங்களில் உள்ள 160 க்கும் அதிகமான தியேட்டர்களிலும் இந்த விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.100 கட்டணம் செலுத்தி இந்த விழாவை காண்பதற்கான டிக்கெட்களை மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


இது தவிர மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தெய்வீக உணர்வை பெற முடியும். நாட்டின் எந்த மூலையில் உள்ள மக்களும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காண வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.