பாஜகவில் புதிய உதயம்.. அம்மா சுஷ்மா சுவராஜ் வழியில்.. டெல்லியில் அறிமுகமாகும் பன்சூரி சுவராஜ்!

Su.tha Arivalagan
Mar 02, 2024,10:31 PM IST

டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகளும், வழக்கறிஞருமான பன்சூரி சுவராஜ், லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். முதல் முறையாக அவர் தேர்தல் களம் காண்கிறார்.


தனது தாயாரைப் போலவே புது டெல்லி தொகுதியில் அவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இன்று அறிவிக்கப்பட்ட பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலிலேயே பன்சூரி சுவராஜின் பெயரும் இடம் பெற்றிருப்பதால் அவரது தரப்பு மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது.




கடந்த 15 வருடமாக வழக்கறிஞராக இருந்து வருகிறார் பன்சூரி சுவராஜ். கடந்த ஆண்டுதான் இவரை பாஜகவின் டெல்லி சட்டப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக பாஜக மேலிடம் நியமித்தது. வார்விக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தவரான பன்சூரி சுவராஜ், லண்டனில் சட்டம் பயின்றவர்.  ஆக்ஸ்போர்டில் உள்ள கல்லூரியில் சட்ட மேற்படிப்பையும் முடித்தவர் பன்சூரி சுவராஜ்.


பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜரானவர் பன்சூரி சுவராஜ். குறிப்பாக முன்னாள் ஐபிஎல் நிர்வாகி லலித் மோடி வழக்கில் அவருக்காக டெல்லி ஹைகோர்ட்டில் ஆஜராகி வாதிட்ட சட்டக் குழுவில் பன்சூரி சுவராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2014 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பன்சூரி சுவராஜ், லலித் மோடிக்காக ஆஜரானார். அப்போது இது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.




பாஜகவின் புதிய தலைமுறையாக உருவாகும் தலைவர்களில் பன்சூரிக்கும் முக்கிய இடம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அவரது தாயாருக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் போல, பன்சூரிக்கும், அமைச்சரவையில் பாஜக இடம் தருமா என்ற எதிர்பார்ப்பும் பலமாக உள்ளது.


"பன்சூரி" என்றால் புல்லாங்குழல் என்று பொருளாகும்.. பாஜகவின் புதிய பூபாளமாக பன்சூரி சுவராஜ் உருவெடுப்பாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.