டேனியல் பாலாஜி கண் தானம் செய்ததினால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார்: கமல்ஹாசன்

Meenakshi
Mar 30, 2024,05:03 PM IST
சென்னை: தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. கண் தானம் செய்ததினால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார் என நடிகர் கமலஹாசன் தனது டுவிட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி.  இவரது தெனாவெட்டான தோற்றத்தாலும், உடல் மொழியாலும் பலரையும் கவர்ந்தவர். வேட்டையாடு விளையாடு, காக்க காக்க இவ்விரு படத்திலும் இவரது நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. இயல்பான நடிப்பு மற்றும் தனிக்கென ஒரு பானியை பின்பற்றியவர். இது மட்டும் இன்றி பொல்லாதவன், வடசென்னை, பைரவா, பிகில், வடசென்னை 2 போன்ற படங்களிலும் நடித்து வில்லன் நடிகர் என்றால் இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் வளர்ந்தவர்.



இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இவருக்கு வயது 48. நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்துள்ளார். இவரது திடீர் மரணச்செய்தி ரசிகர்கள் மட்டும் இன்றி திரைத்துறை பிலபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த டேனியல் உடல் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,   இவரது மறைவு செய்தியை அறிந்த கமலஹாசன் தனது  டுவிட்டர் பக்கத்தில் டேனியல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என்று கூறியுள்ளார்.