டி குகேஷ், மனுபாக்கருக்கு கேல் ரத்னா விருது.. வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

Meenakshi
Jan 17, 2025,05:40 PM IST

டெல்லி: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி குகேஷ் மற்றும் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.


1991ம் ஆண்டு முதல் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கெளரவித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. விளையாட்டு துறையில் உயரிய விருதான இந்த விருதிற்காக ஒவ்வொரு விளையாட்டு சங்கம் மற்றும் கூட்டமைப்பு வீரர்களை பரிந்துரை செய்யும். அதன்படி, இந்தாண்டிற்கான கேல் ரத்னா விருதிற்காக பலர் பரிந்துரை செய்யப்பட்டனர். கடந்த 2ம் தேதி  விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.




டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார். இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற மனு பாக்கர், செஸ் உலக சாம்பியன் பட்டம் வென்ற  டி.குகேஷ், இந்திய ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கினார்.


இதே போல ஹாக்கி, செஸ், குத்துச் சண்டை, துப்பாக்சிச்சூடு உள்ளிட்ட பல்வேறு கையான விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் ஜோதி யர்ராஜி, அன்னு ராணி,  நீது, ஸ்வீட்டி, வங்கிட அகர்வால், அபிஷேக், சஞ்சய், ஜர்மன்பிரீத் சிங், ராகேஷ் குமார் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜூனா விருதும், பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருதை முரளிதரன், அர்மாண்டோ அக்ஜெலோ ஆகியோருக்கும்  வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.


கேல் ரத்னா விருதாளர்களுக்கு ரூ.25 லட்சம் வெகுமதியுடன் பதக்கம் மற்றும் பட்டயம் ஆகியவை வழங்கப்பட்டன. அர்ஜூனா விருதாளர்களுக்கு ரூ.15 லட்சம் வெகுமதியுடன் பதக்கம் மற்றும் பட்டயம் வழங்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்