Michaung புயல் எதிரொலி... சென்னை, ஆந்திரா வரும் 54 ரயில்கள் ரத்து

Aadmika
Dec 03, 2023,12:06 PM IST

சென்னை : வட தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் மிச்சாங் (மிக்ஜாம்) புயல் டிசம்பர் 05 ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் ஆந்திரா வரை செல்லும் 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு கடற்கரை ரயில்வே மற்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளன.


தென்மேற்கு வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறி உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் உருவாகி உள்ளதால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 3 ம் தேதி முதல் டிசம்பர் 5 ம் தேதி வரை மிக அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. காற்றின் வேகமும் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள், சிறப்பு ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து ராஞ்சி வழியாக தென் தமிழகத்திற்கு வரும் ரயில்கள், தமிழகம் வழியாக கேரளாவின் ஆலப்புழா வரை செல்லும் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 




நாகர்கோவில் - ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை - ஷாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், புதுச்சேரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 54 ரயில்கள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தொலைதூரம் செல்லும் 108 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயும் அறிவித்துள்ளது. விஜயவாடா - சென்னை சென்ட்ரல், நிஜாமுதீன் சென்னை துரந்தோ ரயில், கயா சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


நகர்ந்து வரும் "புயல்".. 3, 4 தேதிகளில் செம மழை இருக்கு.. யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?