விடுவிடுவென தெருவில் இறங்கி.. மாப்பை எடுத்து.. தெருவைச் சுத்தம் செய்த எஸ்.வி.சேகர்!

Meenakshi
Dec 07, 2023,06:14 PM IST

சென்னை: மிச்சாங் புயல் காரணமாக தேங்கிய வெள்ள நீர் வடிந்த பின்னர் ரோடுகள் எல்லாம் சகதியாக மாறியிருக்கிறது. இதைச் சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்வி சேகரும் இந்தப் பணியைச் செய்து அசத்தியுள்ளார்.


சென்னை மந்தைவெளியில் தனது வீட்டின் அருகில் இருந்த சகதியை சுத்தம் செய்தார் எஸ்.வி.சேகர். பெரிய சைஸ் மாப்பை எடுத்து தெருவில் இறங்கி சுத்தம் செய்தார். 


மிச்சாங் புயல் சென்னையை புரட்டி போட்டு விட்டது. மிச்சாங் புயலினால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டித்து, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர், பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.




மயிலாப்பூர், பிருந்தாவன் தெரு, தேவடி தெரு, ஆர் கே மடம், கபாலீஸ்வரர் கோவில், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.  ஆங்காங்கே தேங்கியிருந்த வெள்ள நீர் தற்பொழுது வடிய தொடங்கி விட்டது. வெள்ளநீர் வடிந்த பின்னர் ரோடுகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு இடையூராக இருந்து வருகிறது. இவற்றை அகற்றுவது மாநகராட்சி பணியாளர்களுக்கு சவலாக உள்ளது. சென்னையை தூய்மைப்படுத்த வெளி மாவட்டங்களில் இருந்து பணியாளர் வரவழைக்கப்பட உள்ளனர்.


இந்த நிலையில், நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்வி சேகர் மந்தை வெளியில் தனது  வீட்டின் அருகில் இருந்த சகதிகளை சுத்தம் செய்துள்ளார்.அவர் சுத்தம் செய்வது போன்ற வீடியோ தற்பொழுது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியும் உள்ளார்.


அவர் கூறுகையில், எல்லோருக்கும் வணக்கம், நான் எஸ் வி சேகர். சமீபத்தில் பெய்த மிகப் பெரிய மழை இது. ஆற்றின் நீர் மட்டம் அதிகமாக இருந்ததால் குறைந்துள்ளது.  சாதாரணமாக ஒரு நாளில் குறைய வேண்டிய நீர் தற்பொழுது 3, 4  நாட்களில்  குறைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில்  வீடு வாங்கி கட்டியவர்கள் ஏரியோட சர்குலேஷன் இருப்பதினால், பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


கடவுளுக்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். நம்மை விட பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் இருக்காங்க. நம்மளுடைய பங்களிப்பாக அட்லீஸ்ட் நம்ம வீட்டு வாசலுக்கு முன்னாடியாவது சுத்தம் செய்யலம்னு நினைச்சு செய்றேன். 


இந்த சமயத்துல  24 மணி நேரமும் அயராது  பாடுபட்ட எலக்ட்ரிசிட்டி டிபார்ட்மெண்ட், கார்ப்பரேஷன் டிபார்ட்மெண்ட், நகராட்சி பணியாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.