Cyclone DANA.. வருகிறது வட கிழக்குப் பருவ காலத்தின் முதல் புயல்.. ஒடிஷாவுக்கு எச்சரிக்கை!

Su.tha Arivalagan
Oct 20, 2024,01:09 PM IST

சென்னை: வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளது. இது புயலாக மாறி ஒடிஷாவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் உருவாகும்போது அதற்கு டானா என்று பெயர் சூட்டப்படும். கத்தார் நாடு பரிந்துரைத்த பெயர் இது.


வட கிழக்குப் பருவ மழை இந்தியாவில் தொடங்கியுள்ளது. தொடக்கமே அதிரடியாக இருந்தது. முதல் ஸ்பெல் மழை சூப்பராக பெய்து முடிந்துள்ள நிலையில் அடுத்து வங்கக் கடலில் ஒரு புதிய புயல் உருவாகப் போகிறது. நாளை வங்கக் கடலில், அந்தமான் பகுதியில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறுமாம். ஒடிஷா கடற்கரையை நோக்கி இது நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




அக்டோபர் 24 அல்லது 25ம் தேதி இது ஒடிஷாவில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் நிலவிய தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல பெங்களூரும் வெள்ளக்காடானது. ஆந்திராவிலும் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக திருப்பதி கோவிலில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்து வரும் புயலானது, தென் மாநிலங்களுக்குப் பாதிப்பைத் தராது என்று கூறப்படுகிறது. நடப்பு மழை சீசனில் வரும் முதல் புயல் இதுதான்.


நாளை உருவாகப் போகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தெரற்கு மேற்கு வங்காளம் முதல் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒடிஷா மட்டுமல்லாமல், வங்கதேசம், மியான்மர் வரையும் இந்த புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்