அரபிக் கடலில் நாளை காலை.. அஸ்னா புயல் உருவாகக் கூடும்.. புயலுக்கு பேரு வச்சது யார் தெரியுமா?

Manjula Devi
Aug 29, 2024,05:21 PM IST

டெல்லி: அரபிக் கடலில் நாளை காலை புயல் வலுப்பெற கூடும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்த புயலுக்கு  அஸ்னா என பெயரிடப்பட்டுள்ளது.


மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. அதேசமயம் குஜராத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் குறிப்பிட்ட அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் பல பகுதிகள் சேதத்தை சந்தித்துள்ளன.




மக்கள் தங்களின் உடமைகளை இழந்து தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 27 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தவிர டெல்லியில் இன்று அதிகாலை திடீரென பெய்த கன மழையால் சாலைகளிலும்  பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.


இதற்கிடையே குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில்  உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அரபிக் கடலை அடைந்ததும் நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மே மாதம் வங்கக்கடலில் உருவான ரிமால் புயலை தொடர்ந்து இந்த வருடம் மீண்டும் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா புயல் என பெயரிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் இன்று தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய க்கூடும். மேலும் வலுவான தரைக்காற்றுடன் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 


அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை:


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்