"செல்லப் பிள்ளைகளோடு".. சேலையை வரிந்து கட்டிக் கொண்டு களம் குதித்த செல்வ புஷ்பலதா!

Su.tha Arivalagan
Oct 02, 2023,09:33 AM IST

கடலூர்: கடலூர் மாநகராட்சியின் 1வது வார்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் செல்வ புஷ்பலதா மிக மிக வித்தியாசமானவர். இப்போது அவர் செய்த காரியம் வார்டு மக்களை குஷியில் தள்ளியுள்ளது.


கடலூர் மாநகராட்சியின் 1வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் செல்வ புஷ்பலதா. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். வார்டு மக்களுக்காக வீதிகளில் இறங்கி வேலை செய்யத் தயங்காதவர். வார்டு மக்களின் அன்பையும், பாசத்தையும் பெற்றவர். எப்போது பிரச்சினை என்றாலும், என்ன பிரச்சினை என்றாலும் இவரை அணுகலாம் என்ற அளவுக்கு அத்தனை சுறுசுறுப்பானவர்.


இந்த நிலையில்,  நேற்று இவர் செய்த காரியம் வார்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. வார்டில் நடைபெற்ற தூய்மை செய்யும் பணியின்போது தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அள்ளி சேகரித்தார். அவர்களுக்கு உத்தரவிடுவதோடு நில்லாமல் அவரே இறங்கி வேலை பார்த்ததால் தூய்மைப் பணியாளர்களும் உற்சாகமடைந்தனர். 


கொஞ்சம் கூட கவுரவம் பார்க்காமல், சேலையை வரிந்து கட்டிக் கொண்டு வெயிலில் வேர்க்க விறுவிறுக்க இறங்கி குப்பையைச் சேகரித்தார் செல்வ புஷ்பலதா. பின்னர் குப்பை வண்டியில் குப்பையை ஏற்றிக் கொண்டு அந்த வண்டியை அவரே ஓட்டியும் சென்று அனைவரையும் மூக்கின் மீது விரலை வைக்கச் செய்தார்.




இதுகுறித்து அவர் சூப்பராக ஒரு வீடியோவும் போட்டுள்ளார். அதில், சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன்....... என் வார்டில் நான் சுதந்திரமாக போகிறேன்.....  தூய்மை பணியாளர்களோடும்  வார்டு உறவுகளோடும்.... செல்லப் பிள்ளைகளோடும் சுதந்திரமாக  இன்பமாய் இன்பமாய்...... என்று கூறி மகிழ்ந்துள்ளார் செல்வ புஷ்பலதா.


இப்படி ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கவுன்சிலர் கிடைத்து விட்டால், அதுவும் இப்படி ஒரு தாய்மை உணர்வோடு கூடிய கவுன்சிலர் கிடைத்து விட்டால்.. ஒவ்வொரு வார்டின் ஏக்கமும் தீர்ந்து போய் விடும் அல்லவா.