Crowdstrike அப்டேட்: இன்னும் நிலைமை சரியாகலை.. 2வது நாளாக விமான சேவையில் பாதிப்பு

Meenakshi
Jul 20, 2024,11:40 AM IST

புதுடில்லி:   Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 2 நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தற்போது படிப்படியாக நிலைமை சரியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக நேற்று பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதலினால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் மென்பொருளை எண்ணற்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் Microsoft பயனாளர்களின் பலரது கணினிகளில் 'Blue Screen of Death' Error ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.




இதனால் ஐடி, மீடியா, ஏர்லைன்ஸ், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்ட. மைக்ரோசாப்ட் 365 என்ற செயலியும் முடங்கியது. அவர்களது கம்பியூட்டர் திரையில், புளூ ஸ்கிரீன் ஆப் டெத் என்ற வாசகம் ஒளிர்ந்தது. இதற்கான காரணத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் மைக்ரோசாப்ட்டிலோ அல்லது விண்டோசிலோ எந்த பாதிப்பும் இல்லை. கிரவுட்ஸ்டிரைக் அப்பேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


வின்டோஸ் சாப்வேர் குளறுபடியால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்களை கையால் எழுதி கொடுத்து வந்ததால் விமானங்கள் புறப்பட தாமதமாகியது. சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.  மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு உலகம் முழுவதும் எதிரொலித்ததின் விளைவாக அமெரிக்காவில், யுனைடெட், அமெரிக்கன், டெல்டா ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 


இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஆகிய விமான நிறுவனங்களின் ஆன்லைன் செக்-இன், போர்டிங் ஆகிய பணிகள் முடங்கின. இன்றும் இதன் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 2வது நாளாக சென்னை விமான சேவையில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது. அதேசமயம், தற்போது நிலைமை மெல்ல மெல்ல சரியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று தற்போது வரை 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்த பாதிப்பு இன்று மதியத்திற்குள் சீராகும் என்று நம்புவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.