கிரிக்கெட்டை நம்புங்கள்.. சந்தோஷம் கிடைக்கும்.. மதுரையில் ஆர். அஸ்வின் உற்சாகப் பேச்சு!
மதுரை: கிரிக்கெட்டை முழுமையாக நம்புங்கள். அதில் வரவு செலவுக் கணக்குப் பார்க்காதீர்கள். சந்தோஷம் கிடைக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 65ஆவது ஆண்டு விழா கருப்பாயூரணியில் உள்ள திருமண மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் கலந்து கொண்டார்.
இவருடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, செயலாளார் பழனி, உதவி செயலாளர் பாபா, மதுரை கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் மதுரையில் கிரிக்கெட் பயிற்சி வழங்கி வரும் மதுரை சிஎஸ்கே, எஃப்சிஏ அகாடமி, ஓஜிஎஃப், எம்ஆர்சிஎஸ்ஏ, உள்ளிட்ட பல்வேறு அகாடமிகளும் இதில் கலந்து கொண்டன.
விழாவில் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அஸ்வின் பேசினார். அவர் பேசும்போது, கிரிக்கெட் விளையாட வருபவர்கள் வெற்றி பெறுவோம். அடுத்த கட்டத்திற்கு செல்வோம் என நினைத்து விளையாடுங்கள். கிரிக்கெட்டை நம்புங்கள் சந்தோஷம் கிடைக்கும்.கிரிக்கெட் என்பது வரவு செலவு கணக்கு பார்க்கும் இடம் அல்ல. அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
கிரிக்கெட்டில் அரசியல் இருக்கிறது என நினைத்தால் அது உங்களுடைய தவறு. விளையாட்டில் குறிக்கோளை வைத்து, அதனை நோக்கி சென்றால் மட்டுமே நிச்சயம் சாதிக்க முடியும் என தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசினார். அஸ்வின் பேச்சால், கிரிக்கெட் பயின்று வரும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து லீக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி அஸ்வின் பாராட்டினார். அதே போல் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கும் அப்ரிஷியேஷன் விருதுகள் வழங்கப்பட்டன.
பிறகு மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் அகாடமியில் பயின்று வரும் சக கிரிக்கெட் மாணவர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து விழாவில் சிறுவன் ஒருவன் தனது டி-ஷர்ட்டில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் இடம் ஆட்டோகிராப் பெற்றார்.
அதேபோல் கிரிக்கெட் மாணவர்கள் சிலர் பேப்பர், டி-ஷர்ட், பேட் என விதம் விதமான பொருட்களில் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தனர். விழா நிறைவாக, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு அசைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.