கிரிக்கெட்டில் கிடைக்காத ஆதரவு.. சினிமாவில் முழுசா கிடைச்சது.. ஹரிஷங்கர் ஹேப்பி!

Su.tha Arivalagan
Nov 21, 2023,05:06 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: ஒரு கிரிக்கெட்டராக மட்டுமல்லாமல் லேபில் சீரிஸ் மூலம் ஒரு நடிகராகவும் வலம் வரும் ஹரி சங்கர்  கிரிக்கெட்டில் எனக்கு கிடைக்காத ஆதரவு திரைத்துறையில் கிடைத்து என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


"வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு.. என்ற பழமொழிக்கு ஏற்ப  எந்த மதம், இனம், மொழியை சேர்ந்த மக்கள் வந்தாலும் அவர்களை வரவேற்று வாழ்வதற்கான அடிப்படை வழிகளை கொடுக்கும் பெருமை மிகுந்தது நம்ம தமிழ்நாடு. அதேபோல  எந்த துறையில் இருந்தும் நாடி ஓடி வந்தாலும் நம்ம தமிழ் சினிமா அரவணைத்துக் கை கொடுக்கும். 




வெவ்வேறு துறையில் இருந்து வந்து திரைத்துறையில் சாதித்தவர்கள் பலர். அந்த வரிசையில்  கிரிக்கெட் துறையில் சாதித்த  வீரர்கள் திரையுலகிலும் சாதித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்  சடகோபன் ரமேஷ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் கிரிக்கெட்டையை  அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவை கலந்த திரைப்படமான போட்டா போட்டி என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். பின்னர்  சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவி அண்ணனாக நடித்திருந்தார். 


இவரைத் தொடர்ந்து ஸ்ரீசாந்த் என்ற கிரிக்கெட் வீரர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா காதலனாக நடித்துள்ளார். ஹர்பஜன் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழல் பந்துவீச்சாளர். இவர் பிரண்ட்ஷிப், டிக்கிலோனா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.


நடிகர்களாகும் கிரிக்கெட் வீரர்கள்




இர்பான் பதான் என்ற கிரிக்கெட் வீரர் சீயான் விக்ரம் நடித்த கோப்ரா படத்தின் மூலம் தன் நடிப்பின் பயணத்தை தொடங்கியவர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் உருவான படம் என்பதால் பல்வேறு மொழிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து புகழ்பெற்றவர். 


இந்திய வீரர்கள் மட்டும் தான் திரைத்துறைக்கு  வர வேண்டும் என்பது விதிவிலக்கா என்ன..?.. கடல் கடந்து வந்த மேற்கு இந்தியத் தீவுகள் வீரரான டுவைன் பிராவோ என்ற கிரிக்கெட் வீரர், சித்திரம் பேசுதடி படத்தில் செமையாக ஒரு குத்துப் பாட்டுக்கு  நடனமாடினார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியவர்.


இப்படி இந்திய கிரிக்கெட் துறையைச் சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்கள் திரைத்துறையில் தங்களின் நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி ஜொலித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஹரிசங்கர் என்ற கிரிக்கெட் வீரர் லேபிஸ் சீரிஸ் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி வெளியிட்டுள்ளது.


சச்சின் டெண்டுல்கருடன் ஆடியவர்




ஹரி சங்கர்  ஒரு கிரிக்கெட்டராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். அண்டர்19 பிரிவில் ஜூனியர் நேஷனல் போட்டிகளில் விளையாடி புகழ் பெற்றவர். அனலைசர் ஆகவும், ஐபிஎல் மும்பை அணியில் பல போட்டிகளில் விளையாடியும் உள்ளார். சச்சின் விளையாடிய கடைசி ஐபிஎல் போட்டி முதலாக பல போட்டிகளில் மும்பை அணிக்கு சிறப்பான அனலைசராக பணியாற்றி உள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக ஸ்போர்ட்ஸ் அனலைசராகவும் பணியாற்றி இருக்கிறார்.


இவர் ஏற்கனவே சின்னத் திரையில் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். அம்மன், மாங்கல்ய சபதம், காற்றுக்கென்ன வேலி போன்ற தொடர்களில் நடித்து  பிரபலமானவர். பின்னர் படங்களில் நடிப்பதற்காக தன்னையே முழுதாக இரண்டு வருடங்கள் தயார் செய்து வந்தார். அதைத் தொடர்ந்து மாயாத்திரை, டிரைவர் ஜமுனா, பட்டாம்பூச்சி, போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்தவர் .


லேபில் வெப் சீரிஸ்


தற்போது லேபில் சீரிஸ் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த சீரிஸில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். பல்வேறு திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. இதன் மூலம் ஹரிசங்கருக்கு புதிய வாய்ப்புகளும் குவிந்து வர தொடங்கியுள்ளது.


ஹரிஷங்கர் கொடுத்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: படிக்கும் காலத்திலிருந்தே நடிப்பு மீது எனக்கு தீராத ஆர்வம் இருந்தது. விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட்டதால் அதில் கிடைத்த வாய்ப்புகளை முழுக்க பயன்படுத்திக் கொண்டேன். கிரிக்கெட் நம் எதிர்காலம் இல்லை, அனலிஸ்டாக எனக்கு சரியான சப்போர்ட் கிடைக்கவில்லை, என்று உணர்ந்த போது,  உடனடியாக என் ஆர்வம் முழுவதையும் திரைத்துறை பக்கம் செலுத்தினேன். ஸ்போர்ட்ஸில் எனக்கு கிடைக்காத ஆதரவு திரைத்துறையிலிருந்து முழுதாக கிடைத்தது.  




தொலைக்காட்சியில் என் நடிப்பை ஆரம்பித்தாலும், சினிமா என் கனவாக இருந்தது. லேபில் சீரிஸ் என் கனவை நனவாக்கியுள்ளது. கிரிக்கெட் மூலம் அறிமுகமான நண்பர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் என் ஆர்வத்தைப் பார்த்து லேபில் சீரிஸில் வாய்ப்புத் தந்தார்.  சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்குப் பிறகு, லேபில் சீரிஸ் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தயாரிப்பாளர் பிரபாகரன் அவர்கள் ஆரம்பம் முதலே எனக்குப் பெரிதும் ஊக்கம் தந்தார்.


பாராட்டிய வெற்றி மாறன்




இப்போது சீரிஸ் பார்த்து விட்டு அனைவரும் பாராட்டுவது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்  நான் நடித்த காட்சிகளை தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இப்போது பலரிடமிருந்து பாராட்டுகளோடு, வாய்ப்புகளும் வருகிறது. அடுத்ததாக நல்ல கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிகராக பாராட்டுக்கள் பெற வேண்டும், வித்தியாசமான வில்லன் வேடங்களில் கலக்க வேண்டும், அதை நோக்கியே என் பயணம் இருக்கும் என்றார் ஹேப்பியாக. 


நடிகர் ஹரிஷங்கருக்கு நாயகனாகவும் வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது. விரைவில் அவரை  பல நல்ல  கதாபாத்திரங்களில் காணலாம்.