மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

Aadmika
Sep 12, 2024,06:20 PM IST

டில்லி : டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.


1952 ம் ஆண்டு சென்னையில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சீதாராம் யெச்சூரி, வளர்ந்தது, படித்து எல்லாமே ஹைதராபாத்தில் தான். 1969ம் ஆண்டு டில்லி சென்று பள்ளி படிப்பை தொடர்ந்த அவர், படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக திகழ்ந்தவர். இவர் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் முடித்தவர். 




1974ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூட்ஸ்ட் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை துவக்கினார். 1975ம் ஆண்டு அவசர கால நிலையின் போது கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். இவர் பல புத்தகங்களையும் எழுதி உள்ளார்.


ராஜ்யசபா எம்.பி., யாகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்ட கால பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தவர். 2015ம் ஆண்டு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தவர் இவர். பார்லிமென்னட்டில் பாஜக.,வின் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்த்து அதிகம் குரல் கொடுத்தவர். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரது மகன் 2021ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வயது முதிர்வின் காரணமாக, 72 வயதான சீதாராம் யெச்சூரி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.


இரண்டு நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பகல் 03.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.


தலைவர்கள் அஞ்சலி


சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்