ஆத்தாடி.. மறுபடியும் வருதாம்.. வேறெது.. கொரோனாதான்... எச்சரிக்கும் சீன விஞ்ஞானிகள்!

Meenakshi
Nov 14, 2023,05:31 PM IST
பீஜிங்: குளிர்காலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக சீனா எச்சரித்துள்ளது. இதனால் சீன மக்கள் பீதியில் உரைந்துள்ளனர்.

இந்த கொரோனாவை மறக்கத்தான் முடியுமா.. வராத விருந்தியாக சீனாவிலிருந்து கிளம்பி அலை அலையாக உலக நாடுகளை உலுக்கிப் போட்ட உயிர்க்கொல்லி வைரஸ்தான் இந்த கொரோனா. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உயிர்களைக்  குடித்த கொரோனாவைரஸால் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மீண்டும் கொரோனாவைரஸ் பரவலுக்கு வாய்ப்பிருப்பதாக சீனா எச்சரித்துள்ளது. தற்பொழுது சீனாவில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் மீண்டும் கொரோனா தொற்று பரவ உள்ளதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். "ஐயையோ வருதே.. ஐயையோ வருதே... மூதேவி வருதே".. என்று சீன மக்களையே  வடிவேலு ஸ்டைலில் தமிழில் பாட வைத்துவிடும் போல இந்த கொரோனா. பெயரைக் கேட்டாலே சும்மா நடுங்குதுல்லு!



அந்த அளவுக்கு கொரோனா என்றாலே அனைவரும் நடுங்கும் அளவிற்கு அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம். உலகில் உள்ள வல்லரசு நாடுகள் முதல் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் வரை அனைத்து நாட்டு மக்களையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டு போனது தான் கொரோனா. பரபரப்பாக செயல்பட்டு வந்த மக்கள் அனைவரையும் ஒரு கட்டத்தில் கட்டிப் போட்டது தான் இந்த வைரஸ். பல லட்சக்கணக்கான மக்களை கொன்றது. பொருளாதாரத்தில் அனைத்து நாட்டினரையும் பின்னுக்கு தள்ளியது இந்த கொரோனா. 

இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்திய வைரஸ் மீண்டும் வருகிறது என்று விஞ்ஞானிகள் தற்பொழுது எச்சரித்துள்ளதால் ஒரு விதமான அயர்ச்சி வரத்தான் செய்கிறது. இந்த எச்சரிக்கை சீன நாட்டு மக்களையும் கதிகலங்க வைத்துள்ளது. சீனாவை விட அக்கம் பக்கத்து நாடுகள்தான் பதை பதைத்துப் போயுள்ளனர். இப்போதுதான் எல்லோரும் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கிறோம். இந்த நேரம் பார்த்து மறுபடியும் வந்தால் எப்படித் தாங்குவது என்ற கவலைதான் பலருக்கும்.

இந்த நிலையில், சீனாவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் 209 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் இதில் 24 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடம் குறைவாக உள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்பொழுது குளிர்காலமும் தொடங்கியுள்ளதால்  உருமாறி வரும் கொரோனாவின் பாதிப்பும் அதிகமாக ஏற்படும் என்றும் சீன விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக சீன மக்களிடையே பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. சீனாவின் இந்த எச்சரிக்கையை உலக நாடுகளும் கூர்ந்து கவனிக்கின்றன. தங்களது நாடுகளையும் ஆயத்த நிலைக்கு கொண்டு செல்ல பல நாடுகள் திட்டமிட்டுள்ளன.

"அப்பா சாமி எங்க ஊரு பக்கம் மட்டும் வந்திராதே சாமி.. நாங்க எல்லாம் தாங்க மாட்டோம்.. please வேண்டாம்" .. நம்ம ஊரு மக்களோட மைன்ட் வாய்ஸ் இப்படித்தான் இருக்கு!