ஆன்லைனில் கல்யாணமா?.. என்னங்கப்பா புதுசு புதுசா யோசிக்கிறீங்க

Aadmika
Jul 12, 2023,04:14 PM IST
டெல்லி : இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கன மழை கொட்டி மாநிலமே வெள்ளத்தில் மிதப்பதால் ஆன்லைனில் கல்யாணங்களை நடத்தும் நிலைக்குப் போயுள்ளனர் மக்கள்.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதில் இமாச்சல பிரதேசம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு என மாநிலமே உருக்குலைந்து போய் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அடாத மழையில் ஒரு ஜோடி ஆன்லைனிலேயே விடாமல் திருமணம் செய்து கொண்டுள்ளது. சிம்லாவை சேர்ந்த ஆஷிஷ் சிங்காவிற்கும், குளுவை சேர்ந்த ஷிவானி தாகூருக்கும் இன்று திருமணம் நடப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் மணமக்களின் குடும்பத்தினர் வீடியோ கால் மூலமாகவே திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.




மணமகனை சிம்லாவில் இருந்து ஊர்வலமாக அழைத்து வந்து திருமணத்தை நடத்துவதற்கு தான் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சாலைகள் நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளதால், எதிர்பாராத மழை காரணமாகவும், இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என சொல்லப்பட்டுள்ளதாலும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடியவில்லை. 

இமாச்சல பிரதேசத்தில் மட்டும் மழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதால் வேறு வழியில்லாமல் ஆன்லைனில் திருமணத்தை நடத்தி உள்ளனர். திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம் என நினைத்த மணமக்களின் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இமாச்சல், உத்தரகாண்டிற்கு ரெட் அலர்ட்.. 4 நாட்களுக்கு மழை வெளுக்க போகுதாம்

இந்த திருமணத்தில் இரு வீட்டு தரப்பிலும் ஒரு புரோகிதர் இருந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். மணமகள் ஷிவானி, மகன் மற்றும் இரு வீட்டார் முன்னிலையில் தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டுள்ளார். நிலைமை சரியான பிறகு விரைவில் முறைப்படி இவர்களின் திருமணம் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.