நடுவானில் புருஷன் - பொண்டாட்டி சண்டை..  டெல்லியில் இறக்கி விட்டு ஜெர்மனிக்கு பறந்த விமானம்!

Su.tha Arivalagan
Nov 29, 2023,05:48 PM IST

டெல்லி: பாங்காக்கிலிருந்து, ஜெர்மனியின் மியூனிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் கணவன் மனைவி இடையே கடும் சண்டை மூண்டதால் விமானத்தை டெல்லியில் தரை இறக்கும் நிலை ஏற்பட்டது. அங்கு சண்டை போட்ட தம்பதியை இறக்கி விட்டு விட்டு விமானம் மியூனிச் புறப்பட்டுச் சென்றது.


வீட்டுக்குள் கணவன் மனைவி சண்டை நடப்பதைப் பார்த்திருக்கிறோம்.. ஏன் தெருவில் கூட சண்டை நடக்கும்.. மற்ற பொது வெளிகளிலும் கூட சண்டைக் காட்சிகள் அரங்கேறுவதைப் பார்த்திருப்போம்.. ஆனால் நடுவானில், ஓடும் விமானத்தில் ஒரு ஜோடி சண்டை போட்டு சக பயணிகளை அலற விட்டுள்ளது.


ஜெர்மனியைச் சேர்ந்த அந்த கணவரும், தாய்லாந்தைச் சேர்ந்த அந்த மனைவியும், பாங்காக்கிலிருந்து மியூனிச் கிளம்பிய லூப்தன்சா விமானத்தில் ஏறியுள்ளனர். விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே இருவருக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் விமானப் பணியாளர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. நிலைமை மோசமானது.




இதையடுத்து டெல்லி இந்திரா காந்தி  சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க பைலட் முடிவு செய்தார்.  இதைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையம் தொடர்பு கொள்ளப்பட்டது. அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சண்டை போட்ட கணவன் மனைவி விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.


இருவரையும் இறக்கி விட்ட பின்னரே விமானம் மியூனிச் புறப்பட்டுச் சென்றது. ஏன் இந்த சண்டை, எதற்காக கோபம் என்று தெரியவில்லை.