சென்னை பீச்சில்.. போதையில் போலீஸாரிடம் அடாவடி.. கைது செய்யப்பட்ட ஜோடி மீது 5 பிரிவுகளில் வழக்கு!

Meenakshi
Oct 21, 2024,05:57 PM IST

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மது போதையில் இருந்த ஒரு ஜோடி, தகாத வார்த்தைகளில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் இருவரையும் தற்போது கைது செய்துள்ளனர்.


சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், நேற்று நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரை லூப் சாலையில் ஒருவர் தனது சொகுசு காரை போக்குவரத்திற்கு இடஞ்சலாக நிறுத்தியுள்ளார். காரினுள் இருந்த தம்பதிகளிடம் நீங்கள் யார் என போலீசார் கேட்டு, காரை எடுக்கச்சொல்லியுள்ளனர். அவர்கள் காரை எடுக்க முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தகாத வார்த்தைகளாலும், ஆபாச வார்த்தைகளிலும் போலீஸாரை திட்டியுள்ளனர். ஆண் மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணும் அடாவடியாக நடந்து கொண்டதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். 




அந்த தம்பதிகள் இப்படி எடு, அப்படி எடு. என போஸ் கொடுத்துள்ளனர். நல்லா இருக்கா.. செல்பி எடுங்க . இந்த பீச்சுல எத்தனவாட்டி வீடியோ எடுப்பீங்க. பல்லி மூஞ்சி, வையாபுரி மூஞ்சி. வீடியோ எடுப்பா. பேஸ் நல்லா தெரியுதா? மூஞ்சிய பாரு.. இவங்கல்லாம் அல்லக் கைகள். இவன்லாம் என்ன ஒன்றும் பண்ண முடியாது. நீ என்னடா போன் வச்சிருக்க டப்பா போனு. நா 2.50 லட்ச ரூபாய்க்கு போன் வச்சு இருக்கேன். நாங்களும் ரெக்கார்டு பண்ணிகிட்டு தான் இருக்கோம். 


எங்களை என்ன பண்ண பேறீங்க. அரஸ்ட் பண்ண போறீங்களா... என்று நக்கலாக சிரித்துள்ளனர் அந்த தம்பதிகள். மேலும், நீ யார வேணும்னாலும் கூப்பிடு. நாளைக்கு உன் அட்ஸ்ரஸே இருக்காது. ஒருத்தரும் இருக்க மாட்டீங்க. எடு எடு நல்லவே எடுங்க. நாளைக்கு காலையில யாருமே டிபன் சாப்பிட மாட்டீங்க. எங்க அண்ணனுக்கு போன் போடுறேன். இவன்லாம் ஒரு ஆளுனு. இப்பவே நா உதயநிதிய கூப்பிடுவேன் பாக்குறியா? தேவையில்லாம என்கிட்ட கத்தக்கூடாது. என் ஆக்டிங் டிரைவர் வரும் வரை கார் இப்படி தான் நிக்கும். உன்னால என்ன பண்ண முடியும் இவ்வாறு அந்த தம்பதிகள் தரக்குறைவாக போலீசாரிடம் பேசியுள்ளனர்.


அவர்கள் பேசியதை ரோந்து போலீசார் வீடியோ எடுத்துள்ளனர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பலரும் கொதிப்படைந்தனர்.. இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்படி இவர்களை போலீஸார் கைது செய்யாமல் விட்டனர் . துணை முதல்வரின் பெயரை சர்வ சாதாரணமாக இவர்கள் பயன்படுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் பலர் கொதிப்புடன் கேட்டனர். 


சந்திரமோகனும், தோழி தனலட்சுமியும்


இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார் இந்த தம்பதி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இந்த ஜோடி தலைமறைவாகி விட்டது. வேளச்சேரியில் ஒரு லாட்ஜில் அரை எடுத்துத் தங்கியுள்ளது. இதை கண்டுபிடித்த போலீஸார் இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு வைத்து விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.


அவர்களது பெயர் சந்திரமோகன், தனலட்சுமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல. சந்திரமோகன் வேளச்சேரியைச் சேர்ந்தவர். தனலட்சுமி மயிலாப்பூர். சந்திரமோகனின் தோழிதான் தனலட்சுமி என்று தெரிய வந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்