தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.. மார்ச் 12ல் திமுக கண்டன பொதுக்கூட்டம்!
சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மார்ச் 12ஆம் தேதி திமுக சார்பில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளை மறு சீரமைப்பு செய்தால் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறைய கூடும்.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் தொகுதி மறு சீரமைப்பை மேலும் 30 வருடங்களுக்கு நீட்டி வைக்க வேண்டும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே தொகுதி மறு சீரமைப்பால் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கூறி ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் ஐந்தாம் தேதி நடைபெற்றது.இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களில் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனையால் பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளை கொண்டு கூட்டு நடவடிக்கை குழு அமைத்து மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்துக் கட்சிகளும் முன்மொழிந்தன.
இதனைத் தொடர்ந்து தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ பாதிப்புகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க ஏழு மாநில முதலமைச்சர்கள் சென்னையில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டம் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் வரும் மார்ச் 12ஆம் தேதி மீண்டும் திமுக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மார்ச் 12ஆம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறும். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாவட்டங்கள் சார்பிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ள பொதுக் கூட்டத்தில் முதல் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். அதேபோல் குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் திருச்சியில் நடைபெறும் பொது கூட்டத்தில் முதன்மை செயலாளர் கே.என் நேரு ஆகியோர் கலந்து கொள்வார்கள் என திமுக அறிவித்துள்ளது.