தொகுதி மறுசீரமைப்பு: பல்வேறு மாநில தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த.. தமிழக அமைச்சர்கள்!
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநில தலைவர்களுக்கு திமுக குழுவினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, அமைச்சர் பொன்முடியும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெக்ன் மோகன் ரெட்டியை, அமைச்சர் எ.வ. வேலு குழுவும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.
2026 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளை மறு சீரமைப்பு செய்தால் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறைய கூடும். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் தொகுதி மறு சீரமைப்பை மேலும் 30 வருடங்களுக்கு நீட்டி வைக்க வேண்டும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தொகுதி மறு சீரமைப்பால் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 5ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களில் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனையால் பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளை கொண்டு கூட்டு நடவடிக்கை குழு அமைத்து மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்துக் கட்சிகளும் முன்மொழிந்தன.
இதனைத் தொடர்ந்து தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ பாதிப்புகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க ஏழு மாநில முதலமைச்சர்கள் சென்னையில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டம் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய தமிழக அமைச்சர் எ.வவேலு, எம்பி வில்சன் ஆகியோர் நேரில் சென்று கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர்.. அதே போல, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவுக்கு அழைப்பு விடுத்தனர்.
ஏற்கனவே ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உறுதி அளித்துள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.