இங்கிலாந்து ஆளுங்கட்சி மோசமாக தோற்கும்.. ரிஷி சுனாக்குக்கும் அடி கிடைக்கும்.. அதிர வைக்கும் சர்வே!

Su.tha Arivalagan
Apr 01, 2024,01:43 PM IST

லண்டன்:  இங்கிலாந்து அரசியலில் ஆளுங்கட்சிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தோல்வி வரும் தேர்தலில் கிடைக்கும் என்று சர்வே ஒன்று தெரிவித்துள்ளது. பிரதமர் ரிஷி சுனாக் தனது தொகுதியில் தோல்வியைத் தழுவுவார் என்றும் அந்த சர்வே கணித்துள்ளது.


சிவில் சொசைட்டி பிரச்சார கழகம் எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்களிடையே மிகப் பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சி மிகப் பெரிய தோல்வியைத் தழுவும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.




இந்த ஆண்டு கடைசியில் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், பிரதமர் ரிஷி சுனாக்கும் கூட மோசமான தோல்வியைத் தழுவுவார் என்றும் அந்த சர்வே தெரிவித்துள்ளது.  ரிஷி சுனாக், வடக்கு யார்க்ஷயர் தொகுதி உறுப்பினராக தற்போது இருந்து வருகிறார்.


15,029 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  இந்தக் கருத்துக்  கணிப்பில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கடைசியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்போது கிடைத்த வாக்கு சதவீதத்தை விட 3 சதவீதம் அதிகமாகும்.  ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும் என்றும் இது கணித்துள்ளது.


100 சீட்களை கூட ஆளும் கட்சி வரும் தேர்தலில் வெல்லாது என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. தொழிலாளர் கட்சி 468 தொகுதிகளை வெல்லும் என்றும் அது கணித்துள்ளது. நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட தொகுதிகளை கன்சர்வேட்டிவ் கட்சி இழக்கும் என்றும் இது தெரிவிக்கிறது. இதுவரை சந்தித்திராத பெரும் தோல்வியை கன்சர்வேட்டிவ் கட்சி சந்திக்கும் என்றும் சர்வே தெரிவித்துள்ளது.