லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி.. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தீர்மானம்!

Aadmika
Jun 08, 2024,09:59 PM IST

டில்லி : லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக (லோக்சபா  காங்கிரஸ் தலைவர்) காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியை ஒரு மனதாக தேர்வு செய்து இன்று (ஜூன் 08) நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெற்ற அபார வெற்றியை தொடர்ந்து இன்று கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் டில்லியில் நடைபெற்றது. காங்கிரசின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் பேசுகையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். மேலும், பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்குவதற்கு சரியான நபர் ராகுல் காந்தி மட்டுமே என்றும் தெரிவித்தார். அதே போல் காங்கிரஸ் பார்லிமென்ட் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 




எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் எந்த தொகுதியை வைத்துக் கொண்டு, எதை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் வயநாடு மக்கள் இரண்டு முறை ராகுல் காந்திக்கு வெற்றியை தந்துள்ளதால் அவர் வயநாடு தொகுதியை தான் வைத்துக் கொள்ள வேண்டும் என கேரள எம்.பி., கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் ரேபரேலியை வைத்துக் கொண்டால் தான் பாரம்பரிய கட்சி மீண்டும் பலம் பெற உதவும் என உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


ஆனால் ராகுல் காந்தி, எந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ள போகிறார் என்பதை ஜூன் 17ம் தேதிக்கு முன்னதாக முடிவு செய்ய வேண்டும். இதற்கு முன் அடுத்த வாரம் ரேபரேலி தொகுதி மக்களை சந்திக்க ராகுல் காந்தி, தனது தாய் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தியுடன் செல்ல உள்ளார். அவர் சென்று திரும்பி பிறகு தனது இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இது பற்றி என்ன முடிவு எடுக்கப்பட்டது என இதுவரை தகவல் வெளியாகவில்லை.