ஆபாசமாக பேசுகிற துணிச்சல் எப்படி வருகிறது.. கொஞ்சமும் வெட்கம் இல்லையா.. ஜோதிமணி ஆவேசம்

Su.tha Arivalagan
Aug 18, 2024,11:07 AM IST

கரூர்: ஒரு பெண், அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவரது மார்பையும், உடலையும் மட்டுமே பார்க்கிற,அவர் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில்,பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கமோ, பயமோ இல்லாமல் ஆபாசமாகப் பேசுகின்ற  துணிச்சல் எப்படி வருகிறது?  இதை எப்படி ஒரு நாகரிகமான சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற சமூகம் அனுமதிக்க முடியும்?  என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆவேசமாக கேட்டுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வருண் குமாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடந்த சிலநாட்களாக பொது வெளியில் பூசல் வெடித்து வருகிறது. வருண் குமாரையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசியதாக வருண் குமார்  கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். சிலர் கைதாகியுள்ளனர்.


இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆவேசமாக ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. வந்திதா பாண்டே IPS மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான ஆபாசமான, அறுவெறுத்தக்க,ஒரு நாகரிமான சமூகம் எவ்விதத்திலும் ஜீரணிக்கமுடியாத  கமெண்ட்டுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.(பொதுவெளியில் பதிவிட முடியாத அளவிற்கு ஆபாசமானவை) 


ஒரு பெண், அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவரது மார்பையும், உடலையும் மட்டுமே பார்க்கிற,அவர் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில்,பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கமோ, பயமோ இல்லாமல் ஆபாசமாகப் பேசுகின்ற  துணிச்சல் எப்படி வருகிறது?  இதை எப்படி ஒரு நாகரிகமான சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற சமூகம் அனுமதிக்க முடியும்? 


அவரது கணவரை (வருண்குமார் ஐபிஎஸ்) இழிவுபடுத்துவதாக நினைத்து,அவர் குடும்பத்துப் பெண்கள் ,குழந்தைகள் மீது ஆபாசத் தாக்குதலை, அச்சுறுத்தலைக்  கட்டவிழ்த்து விடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  ஒரு காவல்துறை அதிகாரிக்கும்,அவர் குடும்பத்திற்குமே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன? 


இதுபோன்ற இணைய,சமூக ஊடக,ஆபாசத்தாக்குதலால், எவ்வளவோ பெண்களும், அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை பெண்களின் மீதான இதுபோன்ற ஆபாசத்தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தையே சீர்குலைப்பது என்பதை எளிதாக கடந்துபோய்விட முடியாது. இது நாளை மற்ற பெண்கள் மீது இன்னும் மோசமாக ஏவப்படும்.  தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


ஒரு சக பெண்ணாக, நாடாளுமன்ற உறுப்பினராக  எனது தொகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களுக்கு எனது அன்பையும்,உறுதியான ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜோதிமணி கூறியுள்ளார்.