காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்?.. நாளை வரைக்கும் வெயிட் பண்ணுங்க.. செல்வப் பெருந்தகை தகவல்

Su.tha Arivalagan
Mar 21, 2024,10:38 PM IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற பட்டியல் இன்று இரவுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் நாளை காலை இந்தப் பட்டியல் வெளியாகும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.




ஒரு தொகுதிக்கு மூன்று பேர் என்ற வகையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மூன்று பேரில் ஒருவர் இறுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார். காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி என்பதால் டெல்லி தலைமையே வேட்பாளர்களை உறுதி செய்து அறிவிக்கும்.


இதுகுறித்து முன்பு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டு கட்சி மேலிடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவைச் சந்தித்துப் பேசவுள்ளோம். அதன் பிறகு மத்திய குழு கூட்டம் நடைபெறும். அதில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் கிடைத்த பின்னர் இன்று இரவுக்குள் பட்டியல் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்பட்டியல் நாளை காலைதான் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை பத்தரை மணி வாக்கில் பட்டியல் வெளியாகும் என்று செல்வப் பெருந்தகை தற்போது தகவல் வெளியிட்டுள்ளார்.


யாருக்கு சீட் கிடைக்கும்.. யாருக்கு கல்தா?:


காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை வேட்பாளர் பட்டியலில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளில் அதே வேட்பாளர்களே மீண்டும் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் இந்த முறை தேனியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. மாறாக கடலூரில் போட்டியிடுகிறது. அதேபோல மயிலாடுதுறை, நெல்லையிலும் அது நிற்கிறது. 


கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்பாளர்கள் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் திமுக பாணியில் ஒரு சில சிட்டிங் எம்பிக்களுக்கு சீட் கொடுக்கப்படாமல் நிராகரிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. காரணம் கடந்த முறை சரிவர செயல்படாத எம்பிக்களை மீண்டும் நிறுத்தினால் வெற்றிக்கான வாய்ப்பு குறுகிவிடும் என்பதால் திமுக பாணியில் காங்கிரசும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.