ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. தேசிய அளவில் போராட்டம்.. எதிர்க்கட்சிகளை திரட்டும் காங்கிரஸ்

Su.tha Arivalagan
Mar 25, 2023,10:01 AM IST

டெல்லி: ராகுல் காந்தியை  எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து தேசிய அளவில் "ஜனநாயகத்தைக் காப்போம்" என்ற இயக்கத்தை நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த இயக்கத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.


வெள்ளிக்கிழமை நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம்ர ரமேஷ் கூறுகையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பாக அரசியல் ரீதியான செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம். கட்சி மேற்கொள்ளவுள்ள சட்ட ரீதியான அணுகுமுறைகள் குறித்து அபிஷேக் மனு சிங்வி விவரித்தார். நாடு தழுவிய அளவில் வரும் நாட்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம்.


ராகுல் காந்திக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன. இதை வரவேற்கிறோம். அதேசமயம், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு எதிர்க்கட்சியுடனும் பேசி வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. தற்போது நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இது வலுப்படவேண்டும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.


முன்னதாக ராகுல்காந்தி தகுதிநீக்கத்தைக் கண்டித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இவர்களில் பலரும் மத்திய பாஜக அரசை "சர்வாதிகார அரசு" என்றும் வர்ணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.