திமுகவுடன் பேச்சுவார்த்தை திருப்திகரமாக, சுமூகமாக இருந்தது.. கே.எஸ். அழகிரி மகிழ்ச்சி!

Su.tha Arivalagan
Jan 28, 2024,06:08 PM IST

சென்னை:  திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக, திருப்திகரமாக இருந்ததாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கியக் கட்சிகளான திமுகவும், காங்கிரஸும் இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.


டி.ஆர்.பாலு தலைமையில் திமுக குழுவும், சல்மான் குர்ஷித் தலைமையிலான காங்கிரஸ் குழுவும் இதில் கலந்து கொண்டன. திமுக குழுவில் ராசா, கே.என். நேரு உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். காங்கிரஸ் குழுவில், அஜய் குமார், முகுல் வாஸ்னிக், கே. எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.




பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி பேசுகையில்,  பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்தது. ஆக்கப்பூர்வமாக இருந்தது. எங்களுக்குள் என்ன பேசினோம் என்பதை இப்போது வெளியில் சொல்வதில்லை  என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது, வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது, எப்படி பிரசார உத்திகளை வகுப்பது, பாஜகவை எப்படி எதிர்கொள்வது, அதிமுகவை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்துப் பேசினோம். கூட்டணிக் கட்சிகளை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்றும் பேசினோம்.


திமுகவிடம் நாங்கள் எந்தப் பட்டியலும் கொடுக்கவில்லை. எங்கள் ஆபீசிலிருந்து எந்தத் தகவலும் லீக்காகவில்லை. அப்படி வந்த தகவல்கள் பொய்யானவை, தவறானவை என்றார்.


முகுல் வாஸ்னிக் கூறுகையில், விரைவில் மீண்டும் பேசுவோம். புதுச்சேரி குறித்தும் பேசினோம்.  மகிழ்ச்சிகரமாக இருந்தது, திருப்திகரமாக இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது. இதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதற்கேற்றார் போலவே பேச்சுவார்த்தை இருந்தது. இருவரும் இணைந்து பாடுபடுவது பிரிவினைவாத சக்திகளை எதிர்ப்பதற்கு உதவும் என்பதை இருவரும் உணர்ந்துள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேசுவோம். உடன்பாடு எட்டப்பட்டதும் அறிவிக்கப்படும் என்றார் முகுல் வாஸ்னிக்.