பொறுத்திருந்து பாருங்கள்.. மொத்த முடிவுகளும் மாறப் போகுது.. சோனியா காந்தி சூப்பர் நம்பிக்கை!

Meenakshi
Jun 03, 2024,06:11 PM IST

டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் வந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் மாறும், பொறுத்திருந்து பாருங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி முடிவடைந்தது. தேர்தல் முடிந்த அன்று மாலையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில், இந்தியா கூட்டணி கட்சிகளை விட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  தான் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான கருத்து கணிப்புகள் மோடி ஆட்சி மீண்டும் அமையும் என்று தெரிவித்தன.




இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா இன்று டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பிக்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.


இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தியிடம் எக்சிட் போல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், தேர்தலுக்கு பிந்தைய கருணித்து கணிப்புகள் மாறும், பொருத்திருந்து பாருங்கள். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கலைஞர் பிறந்த நாள் அன்று திமுக தோழர்களுடன்  அவருக்கு மரியாதை செலுத்தியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பல சந்தர்ப்பங்களில் கருணாநிதியைச் சந்தித்து அவரின் உரையை கேட்டதும், அவரின் அறிவுரைகளால் பலனடைந்தது அதிர்ஷ்டம் கருதுகிறேன் என்று கூறினார்.