ராகுல் காந்தி வருகிறார்.. தமிழ்நாட்டில் சூறாவளி பிரச்சாரம்.. தடபுடலாக தயாராகும் காங்கிரஸ்!

Manjula Devi
Mar 26, 2024,07:17 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்தில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர்,விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 




தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் அந்தந்த கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு மக்களை சந்தித்து மக்களவை தேர்தலுக்குப் பிறகு சாதி  கணக்கெடுப்பு, இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பு நீக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். இந்தப் பாத யாத்திரைக்கு பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் முதல் வாரம் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இந்தப் பிரச்சாரம் குறித்த திட்டப் பணிகளை காங்கிரஸ் தயாரித்து வருகிறது. எந்த தேதியில் பிரச்சாரம்.. எங்கு பிரச்சாரம் மேற்கொள்வது.. என்பது தொடர்பான  அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.