கோயிலுக்குள் செல்ல முயன்ற காங். தலைவர் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்.. அஸ்ஸாமில் பதட்டம்

Meenakshi
Jan 22, 2024,12:13 PM IST

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் படத்ரவா தானில் உள்ள ஸ்ரீமத் சங்கர் தேவா கோயிலுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களுடன் இணைந்து ராகுல் காந்தி மற்றும் கட்சி தொண்டர்கள் பஜனை பாடிய படி சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி என்ற யாத்திரையை  கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் தொடங்கினார். அவரது யாத்திரை நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைந்தது. விஸ்வநாத் சவுராலி, ஓவனா ஆகிய பகுதிகளில் அவர் நடை பயணம் மேற்கொண்டார். 


லக்கிம்பூரில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை மர்ம நபர்கள் கிழித்தர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்கு சென்றார். அப்போது ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா முடியும் வரை அனுமதி கிடையாது என்று கூறி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதனை அடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ரோட்டில் அமர்ந்து பஜனை போராட்டத்தில் ஈடுபட்டனர்.




கோயிலுக்கு செல்ல விடாமல் தடுப்பது ஏன் என காவல்துறையிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கு போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸார் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.