ஏமாற்றமாக இருக்கிறது.. தற்காலிக தோல்விதான்.. மீண்டு வருவோம்.. காங்கிரஸ் நம்பிக்கை

Su.tha Arivalagan
Dec 03, 2023,05:59 PM IST

டெல்லி:  4 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.


தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் மட்டும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் ஆட்சியை பாஜகவிடம் பறி கொடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் பாஜகவை வீழ்த்த முடியாமல் தோற்றுள்ளது.


இந்த முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் கூறுகையில், தெலங்கானா மக்கள் அளித்த தீர்ப்புக்காக அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.




சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில மக்கள் காங்கிரஸுக்கு அளித்த வாக்குகளுக்காக அவர்களுக்கும் எனது நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். இந்த மூன்று மாநிலங்களிலும் எங்களது செயல்பாடு சந்தேகம் இல்லாமல் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஆனால் உறுதியுடன் கூறுகிறேன், மீண்டும் எழுச்சியுடன் புத்துணர்ச்சியுடன் இந்த மாநில மக்களுக்காக மீண்டும் உழைப்போம். மீண்டு வருவோம்.


நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் போட்டியிட்டது. எங்களது வேட்பாளர்களின் வெற்றிக்காக லட்சோப லட்சம் தொண்டர்களும் உறுதியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல்  பணியாற்றினர். அவர்களைப் பாராட்டுகிறேன்.


இந்த தற்காலிக பின்னடைவிலிருந்து மீண்டு வருவோம். இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து, எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்கு முழுமையாக எங்களைத் தயார்படுத்திக் கொள்வோம் என்று கூறியுள்ளார் கார்கே.