இளைஞர்களைத் தொடர்ந்து.. "பெண்களுக்கு".. 5 அதிரடி வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்!

Meenakshi
Mar 13, 2024,05:50 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பெண்களை கவரும் விதத்தில் 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் தரப்பில் முதல் கட்டமாக 39 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட. அதில், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.




சமீபத்தில் இளைஞர்களுக்கான  வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. காலியாக உள்ள 30 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும், அரசு பணிக்கான தேர்வுத் தாள் கசிவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும். தொழிற் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்க தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது. 


இதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பெண்களுக்காக 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.


அதன்படி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மத்திய அரசின்  புதிய பணி நியமனங்களில் பெண்களுக்கு 50 சதவீதம் இடங்கள் வழங்கப்படும். மத்திய அரசின் கீழுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.


பெண்களின் உரிமைகள் குறித்தும், அவர்களின் வழக்குகளுக்கான போராட்டத்தில் உதவுவதற்கும் ஒரு மண்டல அதிகாரி நியமிக்கப்படுவார். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஒரு விடுதி கட்டப்படும் என்று கார்கே தெரிவித்துள்ளார்.


மோடியின் உத்தரவாதங்களுக்குப் போட்டியாக தற்போது காங்கிரஸும் உத்தரவாதங்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.