காங்கிரசும் திமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.. "ஊழல்.. குடும்ப ஆட்சி".. பிரதமர் மோடி தாக்கு

Meenakshi
Mar 19, 2024,05:31 PM IST

சேலம்:  திமுகவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஊழலும் குடும்ப ஆட்சியும் செய்பவர்கள். தமிழகத்தில் திமுக 5ஜி நடத்தி வருகின்றது. அவர்களின் ஐந்தாவது தலைமுறையை ஆட்சிக்கு வர வேலை செய்கிறார்கள் என்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.


தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 


நேற்று கோவையில் ரோடுஷோ நடத்திய நிலையில் இன்று சேலத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:




கோட்டை மாரியம்மனை வணங்கி உரையை தொடங்குகிறேன். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும் எனக்கும் கிடைத்து வரும் மிகப்பெரிய மக்கள் ஆதரவை நாடே பார்த்துக் கொண்டுள்ளது. கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டே பயணித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவை கண்டு திமுகவின் தூக்கம் கலைந்து விட்டது. இந்த முறை தமிழகத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும், பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்.


வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு, மூன்றாவது பொருளாதாரம் ஆக மாறுவதற்கும் விவசாயிகள் பயன்பெற 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கட்சிக்காக உழைத்து உயிரை விட்ட ஆடிட்டர் ரமேஷை நினைவு கூறுகின்றேன். சமூக விரோதிகள் அவரை கொன்று விட்டனர். இந்நேரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். 


காங்கிரஸ் திமுக கூட்டணியின் இந்தியா கூட்டணி எண்ணம் என்று தெரிந்து விட்டது. ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள சக்தி என்ன என்பது தெரியும்.அதனை அழிக்க நினைக்கிறார்கள் இந்தியா கூட்டணியினர்.


தமிழ்நாட்டில் கோட்டை மாரியம்மன், காமாட்சியம்மன், சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன், சக்தியின் வடிவமாக கொண்டாடுகிறோம். ஆனால், காங்கிரஸ் திமுகவினர் சக்தியின் வடிவமான சனாதனத்தை அழிப்போம் என கூறுகிறார்கள். இந்தியா கூட்டணியினர் ஹிந்து மதத்திற்கு எதிராக கருத்தியல் உருவாக்கி வருகிறார்கள். சக்தியின் தன்மையை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். ஏப்ரல் 19 தமிழகத்திலிருந்து தான் அழிவு தொடங்க உள்ளது.


பெண்களுக்கு பாதுகாப்பு கேடயம் போல் இருந்து அவர்களுக்காக நான் பணி செய்கிறேன். உதாரணமாக கேஸ் சிலிண்டர், இலவச மருத்துவம், இலவச ரேஷன், வீட்டைத்தேடி குடிநீர் வழங்கினோம். முத்ரா கடனில் தமிழகத்துக்கு தான் அதிக பயன். பெண்கள் தான் பாஜகவின் பாதுகாப்பு கவசம். ஜெயலலிதாவை திமுகவினர் எப்படி எல்லாம் இழிவு படுத்தினார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.


திமுகவும்,காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஊழலும் குடும்ப ஆட்சியும் செய்பவர்கள். தமிழகத்தில் திமுக 5ஜி நடத்தி வருகின்றது. அவர்களின் ஐந்தாவது தலைமுறையை ஆட்சிக்கு வர வேலை செய்கிறார்கள். மக்கள் தலைவர் ஜிகே மூப்பனாரையும் நினைவு கூறுகின்றேன். அவர் மனது வைத்திருந்தால் பிரதமராகி இருப்பார். ஆனால், காங்கிரஸ் குடும்ப ஆட்சி அவரை வளர விடவில்லை. 


தமிழகத்தில் ஒப்பற்ற தலைவர் காமராஜர். அரசியலில் நேர்மை என்றால் காமராஜர். அவர் உருவாக்கிய மாணவர் மதிய உணவுத் திட்டம் மிகப்பெரியது. ஏழை எளிய மாணவர்களுக்கு அவர் ஏற்படுத்திய இந்த திட்டம் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்குவதற்காக வழிகாட்டுதலாக இருந்தது. தேசிய சாலைகள் ஐஐடிகள், 20க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் கல்லூரிகள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. 


ரயில்வே உள்கட்டமைப்புக்காக ரூபாய் 260 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் எடுக்க உள்ளேன். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் என்பது நான் பெருமை கொள்கிறேன். தமிழை பேச முடியவில்லை என்று கவலையாக உள்ளது. டாக்டர் ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்று கூறினார்.