ரங்கசாமி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு, புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்கள் பிடிவாதம்..நீடிக்கும் சிக்கல்

Manjula Devi
Jul 09, 2024,09:20 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தேர்தலில் தோல்வியை அடுத்து என்.ஆர்.காங்கிரஸ் பாஜக இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், புதுச்சேரி மாநில பாஜக எம்எல்ஏக்களுடன் மேலிடப் பார்வையாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நான்காவது முறை முதல்வராக பதவியேற்ற முதல்வர் ரங்கசாமி தலைமையில் பாஜக, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடந்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் போட்டியிட விரும்பியது. ஆனால் தங்களுக்கே சீட் தர வேண்டும் என்று கேட்டு வாங்கி அமைச்சர் நமச்சிவாயத்தை வேட்பாளராக நிறுத்தியது பாஜக. முன்னதாக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தமிழிசைக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. 




மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான வைத்திலிங்கத்திடம் நமச்சிவாயம் தோல்வியுற்றார். இதைத் தொடர்ந்து தற்போது அங்கு  என் ஆர் காங்கிரஸ் - பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது. தேர்தல் தோல்விக்கு முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களே காரணம் என பாஜக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட பாஜக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ரங்கசாமி தருவதில்லை எனவும் கூறி வந்தனர்.


மேலும் புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் டெல்லிக்கு படை எடுத்து மேலிடத் தலைவர்களையும் சந்தித்தனர். புதுச்சேரி அரசிலிருந்து பாஜக வெளியேற வேண்டும். வெளியிலிருந்து ஆதரவு தருவோம் என்று மேலிடத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


அதனால்  கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதைப் பற்றி ரங்கசாமி கவலைப்படவே இல்லை. தேவைப்பட்டால் ஆட்சியைக் கலைக்கவும் கூட அவர் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.


இந்த நிலைியல், பிரச்சனைக்கு தீர்வு காண புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை பாஜக மேலிடம் பணித்திருந்தது. அவர் பாஜக எம்எல்ஏக்களுடன் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண 10 நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தார். இதனை அடுத்து நிர்மல் குமார் சுரானாவும், பாஜக எம்எல்ஏக்கள் கல்யாண சுந்தரம், ஜான் குமார், ரிச்சர்ட்  ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தங்களது நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. அதேபோல பாஜக ஆதரவு நியமன உறுப்பினர்களும் கூட ரங்கசாமி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து விலக விரும்பவில்லை. இதனால் சிக்கல் நீடிக்கிறது.


மறுபக்கம் முதல்வர் ரங்கசாமியும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை என்பதால் பாஜக மேலிடம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.