கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புது அட்ராக்ஷன்.. பிப். 1 முதல் சலுகை விலை பயணச்சீட்டு விற்பனை!

Meenakshi
Jan 31, 2024,06:47 PM IST

சென்னை:  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்.1ம் தேதி  முதல் சலுகை விலையில் பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அல்பி ஜான் தெரிவித்துள்ளார்.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிப்பு வந்தது.  படிப்படியாக ஒவ்வொன்றாக செய்து வந்த நிலையில்,  தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமையான  செயல்பாட்டுக்கு வந்துள்ளது.




கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிக தூரம் இருப்பதாக சென்னை வாசிகள் கருத்து தெரிவித்தனர். இந்தப் பிரச்சினையை சரி செய்ய அரசு ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. 


மொத்தப் பேருந்துகளையும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றாமல், சில பேருந்துகளை மாதவரத்திலிருந்தும் இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்.,1ம் தேதி  முதல் சலுகை விலையில் பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த மையத்தில் விருப்பம் போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை மாதந்தோறும் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயணிக்கும் வகையிலான மாதாந்திர சலுகை பயண அட்டையும், மாதந்தோறும் 11ம் தேதி முதல் மறு மாதம் 10ம் தேதி வரை பயணம் செய்யும் வகையிலான 50 சதவீதம் மாணவர் சலுகை பயண அட்டையும் பிரதி மாதம் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும். 




மேலும், 60 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்களும் வழங்கப்படும். பயணிகள் இதனை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்து கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாநகர் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.