"விசில் போடு" பாடல்.. மக்களைக் கெடுக்கிறார்கள்.. போலீஸில் புகார்.. ரசிகர்களுக்கு வருத்தம்ப்பா!

Manjula Devi
Apr 16, 2024,01:22 PM IST

சென்னை: விஜய் நடித்த கோட் படத்தின் விசில் போடு பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்தப் பாடல் நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


சும்மாவே விஜய்ன்னா  காட்டு காட்டுன்னு காட்ட முயற்சிப்பாங்க.. இப்ப அவர் அரசியல் கட்சி வேறு தொடங்கி விட்டார். சும்மா விடுவாங்களா என்ன.. அவரைத் தேடி மீண்டும் சிக்கல்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டன.


கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். அக்கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டது. இதனை தொடர்ந்து  சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு. அதற்குள்ளாக தான் கம்மிட்டான படங்களில் நடித்து முடித்து சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு விடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விரைவாக படத்தில் நடித்து முடிக்க வேண்டும் என படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார் நடிகர் விஜய்.




லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வந்தார் நடிகர் விஜய். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய், அஜ்மல் பிரபுதேவா, பிரசாந்த், போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு எழுந்துள்ளது. மேலும் இப்படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்னு, ரெண்டு, மூணு என ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. கோடை விடுமுறையில் இப்படம் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் செப்டம்பர் 5ம் தேதி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில்  கோட் படத்தில் இடம் பெற்றுள்ள விசில் போடு  என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.  இந்த பாடலை விஜய் பாடி உள்ளதால், இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை இந்தப் பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் பொசிஷனில் இருக்கிறது.


விஜய் படம் என்றாலே பிரச்சனைக்கு சொல்லவா வேண்டும். ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை துளைத்துக் கொண்டுதான் வரும். அந்த வகையில் கோட் பாடத்திலும் விஜய் பாடிய பாடல் வரிகளில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. நாட்டின் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், பிரச்சனையை தூண்டும் வகையிலும்,  போதைப் பொருளை ஆதரிக்கும் வகையிலும், விசில் போடு பாடல் அமைந்துள்ளதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ஒரு புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 


அதில், பார்ட்டி ஒன்று தொடங்கட்டுமா..? என்ற வரியில் மதுபான பாட்டில்கள்  காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. இந்த இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் இப்பாடலில்  வைக்கவில்லை. அதிரடி கௌப்பட்டுமா..? சேம்பைனை தான் தொறக்கட்டுமா..?  என்ற வரிகளில் இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் மற்றும் ரவுடிசத்தை தூண்டும் வகையில் அதிரடி காட்டட்டுமா..? என்ற வரியும் இடம்பெற்றுள்ளன. மேலும் மைக்கை கையில் எடுக்கட்டுமா..? என்ற வாசகம் தமிழக அரசியல் தலைவர்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 


இளைஞர்களின் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார். இது தவிர இடி இடிச்சா என் வாய்ஸ் தான்.. வெடி வெடிச்சா என் வாய்ஸ்.. என்பது அவருடைய நற்பணி மன்றத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை வார்த்தையால் மிரட்டுவது போல் உள்ளது என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆத்தாடி.. ரூம் போட்டு உக்காந்து புகார் மனுவை ரெடி பண்ணிட்டு வருவாய்ங்களோ..!