சீமான் வீட்டில் சம்மன் கிழிப்பு.. கட்டித் தூக்கிய போலீஸ்.. துப்பாக்கியுடன் செக்யூரிட்டி.. பரபரப்பு!
சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரில், நாளை காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு போலீஸார் ஒட்டிய சம்மனை வீட்டில் இருந்தவர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து போலீஸார் விசாரிக்கச் சென்றபோது போலீஸாருக்கும், வீட்டின் பாதுகாவலருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கை கலப்பானது. அந்தக் காவலாளியை போலீஸார் கடுமையாக போராடி, வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகாததால் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு சென்று போலீசார் மேலும் ஒரு சம்மனை ஒட்டினர். நாளை காலை 11 மணிக்குள் சீமான் விசாரணைக்கு வரவில்லை என்றால் கைது செய்யப்படுவார் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்மன் ஒட்டிய பிறகு சீமானின் வீட்டு காவலாளி அந்த சம்மனை கிழித்து எரிந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சம்மன் கிழித்தது தொடர்பாக விசாரணை நடத்த மீண்டும் சீமான் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது போலீசார் அங்கு வந்ததும் காவலாளி போலீசாரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதில் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மற்றும் காவலாளி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவலாளியை உள்ளே தள்ளியபடி போலீஸார் உள்ளே நுழைந்தனர்.
இதையடுத்து காவலாளிக்கும், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸாருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இரு தரப்பினரும் கடுமையாக போராடினர். பின்னர் போலீஸார், காவலாளியை வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது அவர் உள்ளே போக மறுத்து நான் எக்ஸ் ஆர்மி என்று சொல்லவே, நீ யாரா இருந்தா என்ன உள்ளே போ என்று போலீஸார் அவரை உள்ளே திணித்தனர். அப்போதுதான் காவலாளி கையில் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் கடுமையாக போராடி அதையும் பறிமுதல் செய்தனர்.
மன்னிப்பு கேட்ட சீமான் மனைவி கயல்விழி
அவருடன், சம்மனைக் கிழித்த இன்னொரு நபரையும் போலீசார் விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து காவலாளி அமல்ராஜ் மற்றும் சம்மனைக் கிழித்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். யாருடைய உத்தரவின் படி சம்மன் காபி கிழிக்கப்பட்டது என்ற விசாரணைக்குப் பிறகு கிழிக்கச் சொன்னவர்களும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தால் நீலாங்கரை பகுதியில் சீமான் வீடு உள்ள தெருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது கீழே நடந்த அமளி துமளியைப் பார்த்து வெளியில் ஓடி வந்த சீமான் மனைவி கயல்விழி, இன்ஸ்பெக்டரிடம் நடந்ததற்காக ஸாரி சொல்லி மன்னிப்பு கேட்டார். தற்போது சீமான் ஊரில் இல்லை. அவர் கிருஷ்ணகிரியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விசாரணைக்கு சீமான் வராவிட்டால் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.