நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்.. மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்!

Su.tha Arivalagan
Mar 26, 2024,07:17 PM IST

சென்னை: வித்தியாசமான காமெடி நடிப்புக்குப் பெயர் போன நடிகர் சேஷு காலமானார். அவருக்கு வயது 62.


தமிழ் சினிமாவில் தனிப்பட்ட திறமையுடன் கூடிய காமெடி நடிகர்கள் வெகு அரிது. அப்படிப்பட்ட அரிய நடிகர்களில் ஒருவர் தான் சேஷு. மிகச்சிறந்த ஒரு காமெடியனாக வித்தியாசமான நடிப்பின் மூலம் தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு முதலில் சின்னத்திரை ரசிகர்களை அவர் மகிழ்வித்தார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா மூலம் அறிமுகமானவர்தான் சேஷு. சிறந்த நகைச்சுவை நடிகராக அதில் உருவெடுத்த சேஷு, சிறப்பான நடிப்பின் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றார். அந்தத் தொடரில் நடித்த சந்தானம் உள்ளிட்ட நடிகர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. படிப்படியாக அவர்கள் சினிமாவுக்குள்ளும் வந்தனர். சந்தானம் மிகப் பெரிய காமெடியனாக மாறியபோது படிப்படியாக தன்னுடன் நடித்த சேஷு, சிசர் மனோகர் உள்ளிட்டோரை கூட்டணி சேர்த்து அனைவரும் சேர்ந்தே வளர்ந்தனர். 




சேஷு, கடைசியாக சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். அவர் பேசிய பல வசனங்கள் பிரபலமானவை. விவேக்குடன் நடித்தபோது பேசிய அதெல்லாம் சொல்றதுக்கில்லை என்ற வசனமும்,  அச்சச்சோ அவரோ.. அவரு பயங்கரமான ஆளாச்சே என்ற வசனமும் மிகப் பிரபலமாகின.


சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேஷு, இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.