கொழும்பு அருகே திடீர் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்..!

Su.tha Arivalagan
May 02, 2023,03:02 PM IST
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பு துறைமுகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். காயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுகம் அருகே எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு அருகே உள்ள புளூமெந்தால் சாலையில் 2 பேர் சாலை அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களைத் திருட முயற்சித்துள்ளனர். இதை எதிர்த்து ஒரு குழு அவர்களைத் தடுக்க முயன்றது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.



இந்த நிலையில் துறைமுகத்தின் 6வது நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களில் ஒருவரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட கும்பலில் இருந்த சிலர் முயன்றனர். இதையடுத்து இன்னொரு காவலர் அந்த கும்பல் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.இதில் 8 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேருக்கு லேசான காயம் என்று தெரிகிறது. மற்றவர்கள் நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.