"உன்னை அறிந்தால்".. நேற்று பெட்ரோல் பங்க்  ஊழியர்.. இன்று பேராசிரியர்!

Meenakshi
Sep 08, 2023,04:08 PM IST
சிவகங்கை: பல அவமானங்களைச் சந்தித்து இன்று ஒரு பேராசிரியராக இருக்கிறேன்.. வாழ்க்கையில் நாம் உழைப்பை நம்பினால் நிச்சயம் உயரத்தைத் தொடலாம் என்று காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி பேராசிரியர் வேலாயுதராஜா கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில்  உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், உன்னையே நீ அறிவாய் என்கிற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்ட்டது. இப்பயிற்சி வகுப்பை காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் வேலாயுதராஜா நடத்தினார்.



வேலாயுதராஜா பேசுகையில், பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்து, பெட்டிக் கடையில் வேலை பார்த்து,பல அவமானங்களை சந்தித்து, கல்லுரி படிப்பை முடித்து இன்று கல்லுரி ஆசிரியராக உயர்ந்துள்ளேன். கல்வி மட்டுமே நமக்கு எப்பொழுதும் துணை நிற்கும். பெரும் செல்வம், மிகப் பெரிய வீடு, மிகப் பெரிய பங்களா, மிகப்பெரிய பொருட்கள் எல்லாம் தானாக  குறுகிய காலத்தில் அழிந்து போகும் தன்மை கொண்டது. 

ஆனால் கல்வி ஒன்றுதான் எப்பொழுதுமே நம்மை விட்டு மாறாதது. எனது வாழ்க்கையே அதற்கு ஒரு பாடமாக இருக்கும். பங்க் கடையில் 500 ரூபாய்  சம்பளத்தில் ஆரம்பித்த எனது வாழ்க்கை இன்று  ஒரு லட்சம் ரூபாய் பெறுவதாக மாறியதற்கு  கல்வி மட்டுமே காரணம் என்றார் அவர்.



நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். வாழ்க்கை வரலாறு தகவல்களை பின்னுட்டமாக வழங்கிய மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். ஆசிரியை முத்துலெட்சுமி  நன்றி கூறினார்.