"மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும்  மகிழ்ச்சி".. விஜய்யை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

Manjula Devi
Feb 07, 2024,11:55 AM IST
சென்னை: நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சி குறித்து, மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் தான் மகிழ்ச்சி அடைவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பல சாதனைகளைப் படைத்து உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக  தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. 

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்ற விஜயின் கொள்கைகளை  ரசிகர்கள், பொதுமக்கள், திரை பிரபலங்கள், கட்சி 
நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் வரவேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின்  தமிழ்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக கடந்த 29 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். ஸ்பெயின் நாட்டு தொழில் முனைவோர்களுடன் பேசிவிட்டு, இன்றைய தினம் தமிழ்நாட்டிற்கு திரும்பினார் முதல்வர். விமான நிலையத்தில் செய்திாயளர்களிடைய அவர் பேசும்போது விஜய்குறித்து முதல்வரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு முதல்வர் பதிலளிக்கையில், மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி என்றார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனக்கு வாழ்த்து கூறிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள், என அனைவரும் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.