நெல்லையில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..நல உதவிகள் வழங்கி, திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
நெல்லை: மாவட்ட தோறும் கள ஆய்வுப் பணிகளை செய்து வரும் முதல்வர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று 2வது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
திமுக சார்பில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்கிறதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது, அங்கு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இரண்டு நாள் பயணமாக நேற்றும் இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு. க ஸ்டாலின். நேற்று காலை துாத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த முதல்வருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் திருநெல்வேலி வந்தடைந்தார். அங்கு கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 3,800கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் துணை நிறுவனமான சூரிய சக்தி மின்கல உற்பத்தி ஆலையை துவக்கி வைத்தார். இதன் மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்ட வருகிறது.
டாட்டா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்த பிறகு முதல்வர் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரான மறைந்த ரத்தன் டாடா அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ரூபாய் 2574 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 6500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோவில் தெருவில் அமைந்துள்ள திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை சுவைத்து சாப்பிட்டார். பிறகு இரவு அரசினர் மாளிகையில் தங்கி விட்டு இன்று காலை பாளையங்கோட்டைக்கு வருகை தந்தார்.பாளையங்கோட்டையில் 40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய் பழங்கள் சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி எதிரே நேருஜி கலையரங்கில் தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடக்க இருக்கிறார். இதில் மாவட்ட மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி செயலாளர்கள் என அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
அப்போது ரூபாய் 167 கோடி மதிப்பீட்டில் 75,151 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதேபோல் ரூபாய் 1304 கோடியில் 23 முடிவுற்ற திட்ட பணிகளையும், ரூபாய் 309.05 கோடி மதிப்பிலான புதிய 20 திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்