உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு.. அரசு உத்தரவுப்படி இறுதிச் சடங்கு!

Meenakshi
Sep 26, 2023,04:22 PM IST

தேனி:  சின்னமனூரை சேர்ந்த வடிவேல் என்பவர் மூளை சாவு அடைந்தார். அவரது  உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உடல், முதல் அமைச்சர் உத்தரவுப்படி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த வடிவேல் என்பவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். இவருக்கு பட்டுலெட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அலுவலக பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு வந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டவர். சிகிச்சை பலனின்றி அவர் மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தனர்.




இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி மதுரையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரில் வடிவேல் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


இதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேனி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவர் மூளைச்சாவு அடைந்த வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் , எஸ்.பி.  கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்குப் பின் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்தவர் வடிவேல். இவரது உடல் முதன் முறையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது சின்னமனூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.